போர்வை மனிதர்கள்!
நீலகிரியில் வாழும், தோடர் இன மக்களை, 'போர்வை மனிதர்கள்' என, அழைக்கின்றனர். ஆண்கள், பெண்கள் என, இருவருமே, புத்துக்குளி என்ற துணியால், உடம்பை போர்த்திக் கொள்வதால், இவ்வாறு அழைக்கின்றனர்.ஒரு காலத்தில், தோடர் இன பெண்கள், கணவருடனும், அவருடைய சகோதரர்களுடனும் உறவு கொண்டனர். இதனால், தங்களை, பஞ்ச பாண்டவ இனம் என்று கூறிக் கொண்டனர். ஆனால், இன்று, இங்கு, ஒருவனுக்கு ஒருத்தி நிலை நிரந்தரமாகி விட்டது.முன்பெல்லாம், குழந்தை திருமணம் இருந்தது; இப்போது, அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.தாங்கள் வளர்க்கும், எருமை மாடுகளின் கொம்புகளை, முன்பு தொட்டு வணங்கினர். யாராவது இறந்தால், அதே எருமை மாட்டை பலி கொடுத்தனர். இப்போது, இந்த இரு பழக்கங்களும் மாறி விட்டன. எருமை மாட்டிற்கும், இவர்களுக்கும் உள்ள நெருக்கத்தால் தான் முன்பு, இவர்களை, 'எருமையின் குழந்தைகள்...' என்று, அழைத்தனர். இன்று, நீலகிரியை சுற்றி, ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகி, இவர்களில் பலர் வேலைக்கு செல்வதால், மாற்றமும் நிறைய வந்துவிட்டது.- ஜோல்னாபையன்.