உள்ளூர் செய்திகள்

தமிழ் புத்தாண்டில் இங்கு வரலாமே!

பெரும்பாலான சிவன் கோவில்களில், நவக்கிரகங்களுக்கு என்று பொதுவான சன்னிதி இருக்கும்; ஆனால், தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார் கோவிலில், ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனி சன்னிதி உள்ளது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கிறது.தமிழ் புத்தாண்டான, விளம்பி ஆண்டு பிறக்க, இன்னும் ஆறு நாட்கள் இருக்கிறது. பங்குனி மாதத்துடன் தன், 12 ராசி மண்டல பயணத்தை முடிக்கும் சூரியன், மீண்டும் முதல் ராசியான மேஷத்தில் சஞ்சரிக்கும் மாதமே சித்திரை. இந்தக் காலத்தில் நவக்கிரகங்களை தரிசிப்பது அவசியம்!இந்த உலகம் தோன்றிய போது முதன் முதலாக, 'ஓம்' என்ற நாதம் ஒலித்தது. அந்த ஒலியிலிருந்து சூரியன் தோன்றியதாக, சூரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. சூரியனை, 'கண்ணுக்கு தெரியும் கடவுள்' என கூறியுள்ளார், ஆதிசங்கரர். இதையடுத்து, மற்ற கிரகங்களான சந்திரன், அங்காரகன் (செவ்வாய்), புதன், குரு (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனி, ராகு, கேது கிரகங்கள் உருவாயின. இது தவிர, வான மண்டலத்தில் ஏராளமான கிரகங்கள் இருந்தாலும், மேற்கண்ட ஒன்பது கிரகங்கள் மட்டுமே மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பினர், நம் முன்னோர். ஜோதிட சாஸ்திரத்தில் இந்த கிரகங்கள் தான் முக்கியத்துவம் பெறுகின்றன.கச்சியப்ப முனிவரின் புத்திரர், சூரியன்; இவருக்கு உஷா மற்றும் பிரத்யுஷா என்ற இரு மனைவியரும், வைவஸ்தா மனு, எமதர்மராஜன் போன்ற புதல்வர்களும், யமுனா என்ற புதல்வியும் உள்ளனர். ஏழு வண்ணம் மற்றும் ஏழு குதிரைகளை கொண்ட சூரியனது ரதத்திற்கு, ஒரு சக்கரம் மட்டுமே உண்டு. நவக்கிரகங்களின் தலைவராக விளங்கும் சூரியன், தன் திருக்கரங்களில் தாமரைப்பூவுடன் அருள்பாலிக்கிறார். இவர், தன்னை வழிபடுவோருக்கு ஆரோக்கியம், புகழ் மற்றும் நிர்வாகத் திறனை வழங்குகிறார்.இக்கோவிலில் உள்ள எல்லா கிரகங்களும், சூரியனை நோக்கியிருப்பது சிறப்பு. கோவிலில் நுழைந்தவுடன் அருள்பாலிக்கிறார், கோள் தீர்த்த விநாயகர். இவரை வணங்கினால், கோள்களால் (கிரகங்கள்) ஏற்படும் வினைகள் நீங்கும். வினைகள் நீங்குவதால் ஏற்படும் புண்ணிய பலனை, முன் மண்டபத்தில் உள்ள காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அம்மனும் தருவர்.மூலஸ்தானத்தில் உஷா, பிரத்யுஷா தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், சூரிய பகவான். சூரியனின் வாகனம் குதிரை; பொதுவாக, தெய்வங்களின் வாகனங்களை அவர்களின் எதிரே பிரதிஷ்டை செய்வது வழக்கம். சூரியன் எதிரே அவரது வாகனமான குதிரையை பிரதிஷ்டை செய்தால், அதன் வெப்பம் தாளாமல், அது எரிந்து போகும். எனவே, சூரியன் எதிரில், குரு பகவானை பிரதிஷ்டை செய்துள்ளனர். குருவை பார்த்தவுடன், குளிர்ந்து போகிறார், சூரியன்.வியாழனுக்கு முன் உள்ள வலதுபுற படிகளில் இறங்கினால் சனீஸ்வரர், புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் அடுத்தடுத்த சன்னிதிகளில் இருக்கின்றனர்இந்த நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடுவோருக்கு ஜாதகத்தின்படி நிகழவிருக்கும் தீமைகள் நீங்கி விடும். அஷ்டமத்து சனி, ஏழரைச்சனி, ஜென்மச்சனி உள்ளவர்கள், துன்பங்கள் குறைய, இங்கு வந்து வழிபடுகின்றனர். இங்கு, ஒன்பது தீர்த்தங்கள் இருந்தன; நினைத்தது நடக்க தொடர்ந்து, 12 ஞாயிறுகள், இங்கு வந்து வழிபடுவதுண்டு. சூரியன் மேஷ ராசியில் நுழையும், விளம்பி தமிழ் புத்தாண்டில் இங்கு வந்து வழிபட்டு பலனடையுங்கள்.கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை வழியாக, 15 கி.மீ., சென்றால், சூரியனார் கோவிலை அடையலாம்.தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !