மரப்பலகைகளில் காய்கறி வெட்டுகிறீர்களா?
காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்ட, பிளாஸ்டிக் வெட்டுப் பலகைகளை பயன்படுத்துகின்றனர், பெரும்பாலோர்.சமீபகாலமாக, பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை அறிந்து, பலரும் அதை தவிர்த்து, மரப் பலகைகளுக்கு மாறி வருகின்றனர். இவ்வாறு மாறியவர்களுக்கு, அதிர்ச்சி தரும் விஷயம் இது. அதாவது, 'காய்கறி வெட்டுவதற்குப் பயன்படுத்தும் மரப்பலகை கூட, பாதுகாப்பானது இல்லை...' என்கிறார், மும்பையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையின், மூத்த மருத்துவ உணவியல் நிபுணர், வர்ஷா கோர்.அவர் கூறியதாவது:மரம், அதன் இயல்பிலேயே நுண்துளைகள் கொண்டது. அதாவது, அதன் மீது வைத்து வெட்டிய காய்கறிகளிலிருந்து, அது ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சி விடும்.தக்காளிச் சாறு, பச்சை மாமிச துண்டுகள், இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை, மரப்பலகையால் எளிதில் உறிஞ்சப்படுகின்றன. இந்த ஈரப்பதம், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் செழித்து வளர அனுமதிக்கிறது.காலப்போக்கில், இந்த மரப் பலகைகள், கீறல் விட ஆரம்பிக்கின்றன. இந்தச் சிறிய விரிசல்களை முழுவதுமாக சுத்தம் செய்வது கடினமானது. மேலும், சால்மோனெல்லா, ஈகோலி மற்றும் லிஸ்டீரியா போன்ற, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், இதில் வளர ஆரம்பிக்கின்றன.இந்த பாக்டீரியாக்கள், நாம் சமைக்கும் உணவை மாசுபடுத்துவது மட்டுமின்றி, ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. நாட்கள் செல்லச் செல்ல, இந்த பலகைகளின் சிறு துண்டுகள் உதிர ஆரம்பிக்கும். இந்த துகள்களை உட்கொள்வது, வயிற்று ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.இவ்வாறு, வர்ஷா கோர் எச்சரிக்கிறார்.பாதிப்புகள்:* காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, நீரிழப்பு மற்றும் குமட்டல் உள்ளிட்ட, இரைப்பை குடல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். இளம் குழந்தைகள் மற்றும் வயதான குடும்ப உறுப்பினர்கள், இந்த நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் ஆளாகின்றனர்.* சிறிய மரத் துகள்கள், உடலுக்குள் சென்று, குடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.* இறைச்சி, மீன், காய்கறிகள் மற்றும் பழங்கள் அனைத்தையும், ஒரே பலகையில் வெட்டுவதை, வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நடைமுறையானது, தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை, ஒரு உணவிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும் அபாயத்தை, கணிசமாக அதிகரிக்கிறது.மாற்று வழிகள்:* மூங்கில், மரத்திற்கு மாற்றாக இருப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் உகந்தது மற்றும் நீடித்து உழைக்கக் கூடியது. பாரம்பரிய மரப் பலகைகளைப் போலன்றி, மூங்கில் மரப் பலகைகள், குறைவான துளைகளை கொண்டுள்ளது; நீர் உறிஞ்சுதலையும் தடுக்கும்.* 'பைபர்' வகை கண்ணாடிப் பலகைகள் மற்றும் துருப்பிடிக்காத எஃகுப் பலகைகளும், தற்போது பிரபலமடைந்து வருகின்றன. அவை, அதிக காலம் நீடிப்பதோடு, நுண்துளைகள் இல்லாதவை; சுத்தம் செய்யவும் மிகவும் எளிதானது.* பிசின் மற்றும் மர இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் கலவையாலான பலகைகள், நீடித்த உழைப்பு மற்றும் குறைந்த பராமரிப்பு கொண்டவை. இவை, கத்தியால் ஏற்படும் கீறல் குறிகளை, மரத்தை விட அதிகமாகத் தாங்குவதோடு, சுத்தம் செய்யவும் எளிதானவை.- மு.ஆதனி