உள்ளூர் செய்திகள்

பசுமை நிறைந்த நினைவுகளே... (64)

இந்த வருட டூரில், போடிநாயக்கனுாரில் இருந்து கலந்து கொண்ட வாசகி விஜய லட்சுமி, அந்துமணியை யார் என்று தெரியாமலேயே, 'தம்பி தம்பி' என்று பாசமாக பழகியவர், அவரிடம் இரண்டு விஷயங்களை கேட்டுப்பெற்றார் என்று, கடந்த வாரம் எழுதியிருந்தேன்.அது, அவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒன்று. அப்படி போட்டோ எடுத்துக்கொள்ளும் போது அந்துமணி அணிந்திருந்த கூலிங்கிளாசை போட்டுக்கொள்ள வேண்டும் என்பது மற்றொன்று.இந்த இரண்டு விஷயத்தையும் அந்துமணி நிறைவேற்றி வைத்ததுடன், அந்த படத்தை வாரமலர் பா.கே.ப., பகுதியிலும் வெளியிட்டிருந்தார். படம் வந்த நாள், விஜயலட்சுமிக்கு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு எல்லாம் சேர்ந்து வந்த நாளின் மகிழ்ச்சி! போடியில் பாதி பேரிடம் இவர் புத்தகத்தை காட்டினார்; மீதிபேர் இவரிடம் புத்தகத்தை காட்டினர்.இந்த இடத்தில் ஒரு இடைச்செருகல்.'கடந்த, 2002ம் ஆண்டு வரையிலான பழைய குற்றால டூர் விஷயங்கள எழுதிக்கொண்டு இருந்தீங்க. திடீரென ஒரு சின்ன பிரேக்காக நடப்பு வருட (2014) டூரில் நடந்த சுவாரசியங்களை சொல்ல தொடங்கினீங்க. சின்ன பிரேக் என்று சொல்லி பெரிய பிரேக் எடுத்துக்கிட்டீங்களே... நாங்க கலந்து கொண்ட டூர் அனுபவத்த எப்போ எழுதப் போறீங்க... எங்கள கொஞ்சம் கவனிங்க...' என்று, கடந்த, 2003ம் ஆண்டு வாசகர்கள் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.அந்த குரலில் உள்ள நியாயத்தை உணர்ந்ததால், இந்த வாரத்துடன் நடப்பு வருட வாசகர்களின் டூர் அனுபவங்களை நிறைவு செய்கிறேன்.போடி விஜயலட்சுமி போலவே, அந்துமணி மீது பாசம் கொண்டு அவரை தேடிப்பிடித்து போட்டோ எடுத்துக்கொண்ட சிதம்பரம் வாசகியும், ஆசிரியையுமான செல்வராணி, மற்றும் 'என்னை தட்டிக்கொடுத்து பாராட்டினார் அந்துமணி சார். அது ஒன்றே எனக்கு போதும்...' என்று இப்போதும் சொல்லும் கவிதா, தினமும் பஸ்சில் தினமலர் இதழை வரவழைத்து படிக்கும் திருவள்ளூர் மாவட்டம் புதுவலங்கையைச் சேர்ந்த பெனாசிர், அவரது தாயார் ஷகீரா, 'என் வாழ்க்கையில் நடந்த முதல் அதிர்ஷ்டம் இதுதான்...' என்று சொல்லி, தன் தாயார் ராணியுடன் கலந்து கொண்ட பெரிய காஞ்சிபுரம் வாசகி ஜெயந்தி!'என் வீட்டு பூந்தோட்டம் போன்றது வாரமலர்...' என்று சொல்லி, தன் தாயார் விஜயலட்சுமியுடன் கலந்து கொண்ட நெய்வேலி வாசகி சுபா, 'கொளஞ்சி என்பது எங்கள் ஊர் குலதெய்வம்; அந்த தெய்வம்தான் எங்களை இந்த டூருக்கு தேர்வு செய்தது...' என்று சொல்லி, தன் தாயார் தமிழரசியுடன் வந்த வடலுார் வாசகி கொளஞ்சி, 'புயலான வாழ்வில் தென்றலே இந்த டூர்தான்...' என்று சொல்லி, தன் தோழி தெய்வானையுடன் கலந்து கொண்ட கோவை வாழ் இலங்கை தமிழர் புளோரா காந்தி!அதே கோவையில் இருந்து தேர்வாகி தன் பெரிய குடும்ப உறுப்பினர்களிடம், இங்கி பங்கி போட்டி நடத்தி அதில் தேர்வாகி தன் தங்கை சரண்யாவுடன் கலந்து கொண்ட தீபா, 'ஒட்டன்சத்திரம் என்ற ஊரை திண்டுக்கல் மக்களே மதிக்காத போது, எங்கள் ஊரையும், என்னையும் மதித்து தேர்வு செய்த வாரமலர் இதழை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்...'என்று கூறியபடி தன் தாயார் முருகாயுடன் கலந்து கொண்ட நர்ஸ் வளர்மதி.'நீங்கள் வந்ததை எங்கள் அபிமான அந்துமணி வந்ததாக கருதுகிறோம்...' என்று பால்பணியாரம் துவங்கி பல்வேறு பலகாரங்கள் கொடுத்து மகிழ்ந்த ராமநாதபுரம் வாசகிகள் கண்ணகி மற்றும் சாதனா என்று ஒவ்வொருவரின் குற்றால டூர் அனுபவங்களும் சுவாரசியமானவை. அதே நேரம் கொஞ்சம் நீளமானவையும் கூட!ஆகவே, வாய்ப்பு அமைந்தால் அவர்களது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் என்று சொல்லி, இப்போது விட்ட இடத்தை நோக்கி திரும்பச் செல்கிறேன்.கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து, 2014ம் ஆண்டிற்குள்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்!சிதம்பரம் நடராசர் ஆலயம், 'கனகசபை' என்றும், திருவாலங்காடு சிவாலயம், 'ரத்தினசபை' என்றும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம், 'வெள்ளிசபை' என்றும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், 'தாமிரசபை' என்றும், குற்றாலம் குற்றாலநாதர் கோவில், 'சித்திரசபை' என்றும் அழைக்கப்படுகிறது.இதில், சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது குற்றாலம் சித்திரசபையில் மட்டுமே! இங்கு, இறைவன் மூலிகை ஓவியமாக காட்சியளிக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம், இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்துார் புராணம் கூறுகிறது.இத்தனை சிறப்புக்கள் இருந்தாலும், 2003-ல் குற்றாலம் வரும் மக்களில் ஒரு சதவீதம் பேர் கூட இந்த சித்திரசபையை எட்டிப் பார்க்க மாட்டார்கள். அதனால், 'வெறும் குளியல் மட்டும் போதாது, குற்றாலத்தின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவத்தையும் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, அவசியம் சித்திரசபைக்கு வாசகர்களை அழைத்துச் செல்லுங்கள்...' என்று சொல்லியிருந்தார் அந்துமணி.அதற்காக, அனைத்து வாசகர்களையும் அழைத்து, முதல் முறையாக சித்திரசபையை கண்டுபிடித்து போன போது, சித்திரசபை பூட்டியிருந்தது.— அருவி கொட்டும்.குற்றாலமும், நெய் அருவியும்...குற்றாலத்திற்கு அருகில் உள்ளது குண்டாறு நீர்த்தேக்கம். கண்ணுக்கு இனிய இந்த நீர்த்தேக்கத்தை தாண்டி, தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டுகள் நிறைய உள்ளன. இந்த எஸ்டேட்டுகளுக்குள் சில இடங்களில், அருவி போன்று தண்ணீர் விழும். அதில், நெய் அருவியும் ஒன்று. இந்த பாதையில் ஜீப்பில் மட்டுமே செல்ல முடியும். சீசன் நேரங்களில் ஒரு நபருக்கு ஐம்பது ரூபாய் பெற்றுக்கொண்டு அழைத்துச்சென்று திரும்ப கொண்டு வந்து விடுவர். அதிக கூட்டம் இல்லாமல் அமைதியாக, நிம்மதியாக குளிக்கலாம். காலை, 10:00 மணியில் இருந்து மாலை, 6:00 மணிவரை மட்டுமே குளிக்க அனுமதி உண்டு. அதற்கு மேல் அனுமதித்தாலும் யாரும் போக மாட்டார்கள்; அந்த அளவிற்கு இது, ஒரு காட்டுப்பிரதேசம்.எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !