உள்ளூர் செய்திகள்

எண்: 1098

'என்னங்க... இந்த சோட்டு அம்மா என்ன காரியம் செய்திருக்கா தெரியுமா?''''என்ன செய்தா?''''வேலைக்காரி நின்னுட்டா... குழந்தையப் பாத்துக்க யாராவது இருந்தா சொல்லுங்கன்னு கேட்டால்ல, இப்போ அவளே ஏற்பாடு செய்திட்டா.''''அதுக்கென்ன, நல்லதுதானே... நாம யாரையாவது சொல்லி, அப்புறம் ஏதாவது பிரச்னையாச்சுன்னா நீங்க சொன்ன ஆளு, இப்படி செய்திட்டான்னு சொல்வாங்க. குழந்தையப் பாத்துக்க தான் தாராளமா பொம்பளைங்க கிடைப்பாங்களே,'' என்றார்.''அட பொம்பள இல்லங்க.''''அப்போ ஆம்பளயா?''''அய்யோ... ஆம்பளயும் இல்ல.''''ஆம்பளயும் இல்ல, பொம்பளயும் இல்லயா... அப்படீன்னா...''''அய்யே... புத்தி போறத பாரு... பார்வதின்னு ஒரு பத்து வயசு சின்னப் பொண்ண வேலைக்கு வச்சிருக்கா.''''இவ்வளவுதானா... நான் என்னவோ பயந்து போயிட்டேன். இனி, அந்த சின்னப் பொண்ணுக்கு, மூணு வேளை சாப்பாடு கிடைக்கும்; நல்லதுதானே?''''என்னங்க கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம பேசறீங்க... குழந்தைகள வேலைக்கு வெச்சுக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கு தெரியாதா?''''சரிம்மா, அது உனக்கும், எனக்கும் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்... சோட்டுவோட அம்மாவுக்கு தெரியணுமே?''''எல்லாம் அவளுக்கும் தெரியும்... தெரிஞ்சுதான் வச்சிருக்கா.''''அதுக்கு, நாம என்ன செய்யணும்கிறே?''''எல்லாம், என்னையே கேளுங்க... அப்புறம், என் பேச்சைக் கேட்டுகிட்டு ஆடறதா உங்கம்மா மல்லுக்கு நிக்கட்டும்.'''' பரவாயில்ல சொல்லு.''''எண்: 1098...''''அதென்ன, 1098?''''அதாங்க சைல்ட், 'ஹெல்ப்லைன்' நம்பர். அதுக்கு போன் செய்தா, அவங்க நடவடிக்கை எடுப்பாங்க.''''இதெல்லாம், நமக்குத் தேவையா சுஜா?''அப்போது பார்த்து, எங்க வீட்டு காலிங் பெல் ஒலித்தது.சுஜாதான் போய் கதவைத் திறந்தாள். ''அடடே வாங்க வாங்க...''யாரென்று எட்டிப் பார்த்தேன். சோட்டு அம்மா!எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்... சோட்டுன்னா என்ன அர்த்தம்ன்னு. சுஜா, தான், சோட்டுன்னா குட்டிப்பையன்னு அர்த்தம்ன்னு சொன்னாள். அப்போ, இந்தக் குழந்தை பெரியவனானதும் எப்படி கூப்பிடுவாங்க என்று நினைத்து கொண்டேன். அவங்க ராஜஸ்தான்ல இருந்து வந்தவங்க... எங்க அப்பார்ட்மென்ட்டிலே மொாத்தம், 24 வீடுகள்; யாருக்கும் பேர் கிடையாது. ஏ1, பி2, சி4 தான், இவங்களுக்கு மட்டும்தான் சோட்டு அம்மான்னு பேரு!''என்னோட தம்பி ராஜஸ்தான்லேர்ந்து வந்திருக்கு... நெறைய ஸ்வீட் கொண்டு வந்தது; அதான் குடுத்துட்டுப் போலாம்ன்னு வந்தேன்,''என்றாள்.''ரொம்ப நன்றி... ஆமாம், சோட்டு எங்கே?''''சோட்டு துாங்கிட்டான்; அந்த பார்வதி பொண்ணு ரொம்ப நல்லா கவனிச்சுக்கிறா,'' என்றாள்.அவள் போனதும், ''சுஜா, நான் போன் செய்யட்டுமா?'' என்று கேட்டேன்.''என்னங்க நீங்க... இப்பத்தான் ஊர்லேந்து, அவங்க தம்பி வந்திருக்கான்... இப்போ போயி... ஒரு வாரம் போகட்டும் பாக்கலாம்,'' என்றாள்.அது சரி, குடுத்த ஸ்வீட் தீரும் வரைக்குமாவது, போன் செய்ய வேண்டாம்.பத்து நாள் போயிருக்கும்; இதையெல்லாம் மறந்தே போயிருந்தேன். திடீரென்று சுஜா, ''ஏங்க, இன்னிக்கு நீங்க போன் செய்யுங்க,'' என்றாள்.''யாருக்கு?''''அதாங்க, 1098.''''என்னம்மா, அந்தப் பொண்ணுதான் குழந்தைய நல்லா பாத்துக்கறா... அதுக்கும் ஏதோ வயிறு நிறையுது; அத ஏன் கெடுக்கணும்?''''உங்களுக்கு கொஞ்சம்கூட சமூக அக்கறையே கிடையாது; பாவங்க, அந்தப் பொண்ணு. படிக்க வேண்டிய வயசுல, இப்படி வேலைக்கு வந்தா, அதோட வாழ்நாள் முழுக்க, இப்படியே வீட்டு வேலை செஞ்சே கழிக்க வேண்டியதுதான். இதெல்லாம் பாத்துண்டு சும்மா இருக்க முடியாது; நீங்க உடனே போன் செய்யுங்க.''''இல்ல சுஜா... ராத்திரி எட்டு மணியாயிடுச்சு, காலையில பாத்துக்கலாமே...''''பரவாயில்ல... அது, 24 மணி நேர, 'ஹெல்ப்' லைன்தான், நீங்க உடனே போன் செய்யுங்க,'' என்றாள்.சட்டம் போட்டவனை நோகறதா, இல்லை சத்தம் போடும் இவளை நோவதா... போனை எடுத்து, 1098யை அழுத்தினேன்.''இங்கே பக்கத்து ப்ளாட்டிலே, ஒரு வீட்டிலே ஒரு பத்து வயசுப் பெண்ணை வேலைக்கு வச்சிருக்காங்க. படிக்க வேண்டிய வயசுலே, அந்தப் பொண்ணு இங்கே குழந்தையப் பாத்துக்கிற வேலை செய்யுதுங்க,'' என்றேன்.''இப்போ வந்தா அந்தப் பொண்ணு அங்கே இருக்குமா?''''இல்லங்க, அது சாயங்காலம், 6:00 மணிக்குப் போயிட்டு, மறுபடியும் காலை, 8:00 மணிக்குத்தான் வரும்.''''அப்போ நாங்க காலையில வரோம்; உங்க விலாசத்த சொல்லுங்க.'' சொன்னேன்.காலை ௧௦:௩௦ மணி இருக்கும். காலிங் பெல் ஒலித்தது; எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. நினைத்தபடியே, 1098லிருந்து ஆட்கள். வந்தவர்கள் நேராக, பி3க்குப் போகக்கூடாதா? என்னை வந்து பார்த்து விட்டு, 'இ௮, பி௩ தானே' என்று நிச்சயம் செய்து கொண்டு போயினர்.கொஞ்ச நேரத்தில் பெரிய வாக்குவாதம்; ஒரே சத்தம். ஒரு கால் மணி நேரம் போயிருக்கும் யாரோ ஒரு பொம்பளை, புலம்பியபடியே வந்தது. சிறிது நேரத்தில் கத்தியபடியே, அந்தப் பெண்ணுடன் வெளியேறிவள், அந்தப் பெண்ணைத் தலையில் குட்டியபடியே போனாள். பாவம் அந்தக் குழந்தை... அழுதபடியே, அவள் பின்னால் போயிற்று. அந்தப் பெண்தான் அவளோட அம்மாவாம்; சுஜா சொன்னாள்.அந்த, 1098ன் பிரதிநிதி வந்தார், ''சார், அவங்க ஒண்ணும் அந்தப் பொண்ண கொடுமைபடுத்தல. ஏதோ, ஒரு வாரத்துக்குத்தான் வச்சிருக்கோம்ன்னு மழுப்பினாங்க. ஆனா, நான் கண்டிப்பா சொல்லிட்டேன். இனிமே, அந்தப் பெண்ணை வேலைக்கு வெக்க மாட்டாங்க; மறுபடியும், இப்படி ஏதாவது நடந்தா எங்களுக்கு போன் செய்யுங்க,'' என்று சொல்லி போனார்.எனக்கு அன்று பூராவும் ஏதோ போல் இருந்தது. மதியம் சாப்பிடத் தோணலை.''சுஜா, அந்த ராஜஸ்தான் ஸ்வீட் இருக்கா?''என்னை, ஒரு மாதிரியாக பார்த்தாள். அவள் பார்வைக்கு கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு. அதனால், சரியான அர்த்தம் கண்டுபிடிக்க முடியாமல், பலதடவை குழம்பியிருக்கிறேன். இப்போதும், அதான் நடந்தது.''அதெல்லாம் நேத்தே தீர்ந்து போயிடுச்சு.''மறுநாள் -ஆறரை மணிக்குப் பேப்பர் வந்ததும், அதில், மூழ்கினேன்.காலிங்பெல் ஒலித்தது; கதவைத் திறந்தால் அப்பார்ட்மென்ட் அசோசியேஷன் செக்ரட்டரி. பணியிலிருந்து ஓய்வு பெற்று, 10 ஆண்டுகள் ஆகிறது. சும்மா இருக்கிறார் என்று சொல்லக் கூடாதென்று, இந்தப் பதவி. ஆனால், மனுஷன் யாருக்கு எந்தப் பிரச்னை என்றாலும் முன்நின்று செய்வார்.''சார், இன்னிக்கு பத்து மணிக்கு மீட்டிங்... கட்டாயமா வந்துடுங்க,''என்றார்.இவர் மீட்டிங்னாலே, அதுக்கு ஒரே அர்த்தம்தான். குழாயிலே பிரச்னை, தண்ணீர் பிரச்னைன்னு, ஏதாவது ஒன்றைச் சொல்லி ஆயிரமோ, ரெண்டாயிரமோ தண்டம் அழ வைப்பார்.சரி வருகிறேன் என்று சொல்லி அனுப்பினேன்.''கட்டாயம் வந்திடுங்க சார்,''என்றார்.நிதானமாக, 10:15 மணிக்கு போனேன். கிட்டத்தட்ட எல்லாருமே ஆஜர். ஆனால், வழக்கமான சினிமா பஞ்சாயத்து போல, 'சள சள' வென்ற பேச்சைக் காணோம். நான் போய் உட்கார்ந்ததும், ''சரி, ஆரம்பிக்கலாமா?'' என்றார் செக்ரட்டரி.சினிமாவிலே, கீழே உட்கார்ந்திருந்த ஜனங்கள்லே யாராவது ஒருத்தர் தான், இந்த டயலாக்க சொல்வாங்க. இங்கே நாட்டாமையே சொல்கிறார். அதான் வித்யாசம்.சரி, இவர் பாட்டுக்குப் பேசட்டும், எவ்வளவு என்று சொன்னால் கட்டிவிட்டு போகலாம் என்று, மொபைலை எடுத்து, 'பேஸ்புக்'கை நோண்ட ஆரம்பித்தேன்.''சார்... நீங்க செய்தது உங்களுக்கே நல்லாயிருக்கா?''நான் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.''சார் உங்களத்தான்.''''என்னையா!''''ஆமாம் உங்களத்தான்.''''நான் என்ன செஞ்சேன்?''''என்ன சார்... ஒண்ணும் தெரியாத மாதிரிக் கேட்கறீங்க... எந்தப் பிரச்னையா இருந்தாலும், அசோசியேஷன்லே தான் கொண்டு வந்திருக்கணும்; அதை விட்டுட்டு நீங்களே காரியம் செய்தா எப்படி?''என்றார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை. ''நீங்க எதைச் சொல்றீங்க?''என்று கேட்டேன்.''அதான் சார், பி3லே சின்னப் பொண்ண வேலைக்கு வெச்சிருக்காங்கன்னு நீங்க கம்ப் ௌய்ன்ட் குடுத்தீங்களே... அதைத்தான் சொல்றேன்,'' என்றார்.அப்போதுதான் சுற்றிப் பார்த்தேன். சோட்டு அம்மாவும், அப்பாவும் என்னை ஒரு பாகிஸ்தானியைப் பார்ப்பது போல பார்த்தனர்.நான் பயந்த சுபாவம்தான்; ஆனால், அது, என் பெண்டாட்டி சுஜாவிடம் மட்டும்தான்.''ஓஹோ... அதுக்குத்தானா இந்த மீட்டிங்? சரி, உங்ககிட்ட சொல்லியிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க... ஏன் உங்களுக்கு இது தெரியாதா? யாராவது சொன்னாதான் செய்வீங்களா... உங்ககிட்ட சொல்றதுக்கு, இது ஒண்ணும் வீட்டு பிரச்னையில்ல சார். உடனே நீங்க நடவடிக்கை எடுக்கறதுக்கு. இது சமூகப் பிரச்னை, யார் வேணும்ன்னாலும் புகார் குடுக்கலாம்; இதுக்கு நான் யார்கிட்டேயும் அனுமதி கேக்க வேண்டிய அவசியம் கிடையாது. இன்னும் சொல்லப்போனா செக்ரட்டரிங்கற முறையில உங்க மேலயும் சேத்துத்தான் புகார் குடுத்துருக்கணும்; போனா போகுதுன்னு விட்டுடேன்,'' என்றேன். பேசி முடித்த பிறகுதான், ரொம்ப பேசிட்டோம்ன்னு தோணியது. பாவம், எந்த ஒரு பிரச்னை என்றாலும், ஓடி வந்து உதவி செய்வார். அவரைப்போய் இப்படி பேசி விட்டோமே என்று இருந்தது.அவர் உடனே சமாளித்து, ''அதில்லே சார், நீங்க நல்லதுதான் செய்துருக்கீங்க. ஆனால், அது மத்தவங்களுக்கு வேற மாதிரி தோணுதில்லே அதான் சொன்னேன். நீங்க என் மூலமா போயிருந்தா தனிப்பட்ட முறையிலே உங்கள யாரும் குறை சொல்ல முடியாதில்லையா?'' என்றார்.'அடடா இவர் பேசாம அரசியல்வாதியாப் போயிருக்கலாம்; என்னமா தாவறாரு...' என்று நினைத்துக் கொண்டே, ''அவ்வளவுதானே,'' என்று விருட்டென்று எழுந்து சென்றேன்.ஆறு மணிவாக்கில், நானும், என் மனைவியும் வெளியே கிளம்பினோம். எப்பவுமே பைக்கில் போகும்போது, பின்னாடி இருப்பவர்களோடு பேச மாட்டேன். ஆனால் சுஜா, வாயை மூடவே மாட்டாள். அதனாலயே நான் சும்மாவாணும் ம்... ம்... என்று, அவ்வப்போது தலையாட்டிக்கொண்டே வருவேன்.சிக்னலில் நின்றேன். அங்கே சிக்னல் சரி ஆக ரொம்ப நேரம் ஆகும். திடீரென்று, சுஜா என் தோளைத் தொட்டு சுரண்டினாள்.''என்னம்மா,'' என்று திரும்பினேன்.ஒன்றும் பேசாமல் துாரத்தில் கை காட்டினாள்.அவள் கைகாட்டிய இடத்தில், சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள் பார்வதி. ஸ்ரீ. அருண்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !