அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மா அவர்களுக்கு வணக்கம்.நான், 36 வயது இளம் விதவை. நான்கு மகன்களுக்கு தாய். என் வாழ்வில், 9ம் வகுப்பு படிக்கும் வரை தான், மகிழ்ச்சி என்பதே இருந்தது. அதன் பின் நடந்தது எல்லாமே சோகமயம் தான். நான், 9ம் வகுப்பு படிக்கும் போது, என் மீது அன்பு செலுத்திய, என் அருமை அப்பா, விபத்தில் இறந்து விட்டார். நிறைய படித்து, உயர் அதிகாரியாக வர வேண்டும் என்று கனவு கண்டிருந்த எனக்கு, அம்மாவின் அடாவடித்தனத்தால், 10ம் வகுப்பு முடித்ததுமே, சரியாக விசாரிக்காமல் குடிப்பழக்கமும், நிரந்தர வேலையும் இல்லாத ஒருவருடன் திருமணம் நடந்து, சென்னை வந்து சேர்ந்தேன்.வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாத பருவத்தில், திருமணம் என்ற போர்வையில் தள்ளி, பாழும் கிணற்றில் விழுந்த எனக்கு, கணவனின் அன்பு கிடைக்காத நிலையில், தொடர்ந்து அம்மாவின் அடிமையாகவே இருந்தேன். குழந்தை பெற்றுக் கொள்வதை கூட, என் தாயும், மாமியாரும் தான் முடிவு செய்தனர். எனக்கு அடுத்தடுத்து, நான்கு ஆண்பிள்ளைகள் பிறந்தனர். சரியாக ஏழு ஆண்டுகள் முடிவதற்குள், என் கணவர் இறந்து விட்டார். கண்மூடி திறப்பதற்குள், என் வாழ்வு முடிந்து போனது.தொடர்ந்து, அம்மா வந்து சென்னையில் என்னுடன் தங்கினார். கடந்தாண்டு வரை, அவர்களுக்கு அடிமையாகவே, என் வாழ்வும், என் பிள்ளைகளின் வாழ்வும் இருந்தது. அவர்களின் கண்ணசைவில், நான் நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால், 'உன் புருஷன் விட்டுட்டு போன போதே, நானும் விட்டுட்டு போய் இருக்கணும். அப்போது தெரிந்து இருக்கும் உன் நிலைமை...' என்று, மூன்றாவது நபருக்கு உதவியதை போல் வசைப்பாடுவார்.அதனால், அடிமை வாழ்வு பழகி விட்டது. என் கணவர் இறந்த இரண்டு வருடங்களிலேயே, கடினமாக உழைத்து, மத்திய அரசு தேர்வு எழுதி, அரசு வேலை பெற்று, என் உழைப்பில், இன்று பொருளாதார நிலையில், யாரிடமும் கை ஏந்தாமல், என் பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்க வைத்து வருகிறேன். பெரியவன் பொறியியல் படித்து வருகிறான். என் உழைப்பில் தான் அவர்கள் படிக்கின்றனர்; வளர்கின்றனர். ஆனால், என் உழைப்பில் தான், எல்லாம் நடைபெறுகிறது என்பதை என் பிள்ளைகளும் உணரவில்லை; என் தாயாரும் உணரவில்லை.இதனால், நான் செய்துள்ள தியாகத்துக்கும், அவர்களுக்காக கொடுத்துள்ள வாழ்வுக்கும், வசதிக்கும், நான் தான் காரணம் என்ற அளவில், என்னை சரியான மரியாதையோடு, என் பிள்ளைகள் கூட நடத்தவில்லை. அவர்களை நான் கண்டிக்கவும் முடிவதில்லை.இந்நிலையில், என் துறையில் பணியாற்றிவரும், 38 வயது நபர் ஒருவர், எனக்கு இரண்டு ஆண்டுகளாக நல்ல நண்பர். என் வீட்டிற்கும் நன்கு அறிமுகமான நண்பரானார். என் தாயாருக்கும், என் பிள்ளைகளுக்கும், அறிவு ஆசானாக இருந்து, நட்பு பாராட்டினார்.அவருக்கு, 12 வயதில் ஒரு குழந்தை; அவர் கடந்த பத்து ஆண்டுகளாக, தன் மனைவியின் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். தற்போது தான், என் தோழி ஒருவர், அவரது மனைவி பத்து ஆண்டுகளுக்கு முன், பணிபுரியும் அலுவலகத்துக்கே வந்து, அவமானப்படுத்திய சம்பவத்தையும், இதனால், அவர் மாவட்ட மாறுதல் கோரியதையும் சொன்னார்.இந்நிலையில், என் நண்பர், ஓர் ஆண்டுக்கு முன் விவாகரத்து மனு செய்திருக்கிறார். எனவே, அவரது மனைவி அவரை அசிங்கப்படுத்துவதற்காக, என் வீடு தேடி வந்து, சந்தேக எண்ணத்தோடு அவரை குறித்து ஏதாவது தெரியுமோ என்று விசாரித்து சென்றார்.நான் இல்லாத போது, என் தாயாரை தனியாக சந்தித்து, தவறானவைகளை சொன்னதின் விளைவு, என் தாயாரே, என்னை சந்தேகப்பட ஆரம்பித்தார். எங்களது வீட்டில் தேவையற்ற சண்டைகள் நடந்தன. அதன்பின், சில மாதங்களில், என் தாயார் இறந்து விட்டார். நான் என் நண்பருடன் கொண்ட நட்பின் விளைவாக தான், எனக்கும், தாயாருக்கும் சண்டை வந்ததாகவும், அதன் விளைவால், என் அம்மா இறந்ததாகவும் என் உறவினர்களும் நம்பி விட்டனர்.என் தாயார் இறந்த சில மாதங்களிலேயே, அவரை அசிங்கப்படுத்துவதாக நினைத்து, என் அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும், என்னையும், அவரையும் குறித்து, தவறான புகார்களை அளித்து, என்னால் தான், அவர் மனைவியை விவாகரத்து செய்ய மனு செய்தார் என்று, அபாண்டமாக பழி சொல்லி, என்னை களங்கப்படுத்தி விட்டார் அவர் மனைவி. அவரை பல இடங்களில் விசாரணை என்ற பெயரில் அலைக் கழித்து, பிறகு அந்த பெண்ணே, தன் கணவரிடம் செட்டில்மென்ட் பேசி, பெரிய தொகையை பெற்று, விவாகரத்து பெற்று சென்று விட்டார். ஆனால், பழி மட்டும் என் மீது தொடர்கிறது.'எந்த பாவத்தையும் செய்யாமல், நட்பையும் கேவலமாக பேசுகின்றனரே...' என்று நினைத்து, நான் மரண அவஸ்தையை அனுபவித்து வருகிறேன். இந்நிலையில், விவாகரத்து பெற்ற அவருக்கு, அவரது உறவினர்கள் மறுமணம் செய்ய முயல்கின்றனர். அதில், என் நண்பருக்கு துளியும் விருப்பம் இல்லை. இதற்கு, அவர் கூறும் காரணம்:*ஒரு பேயிடம் பத்து ஆண்டுகள் பட்ட பாடு போதும். என் குழந்தை எங்கு இருந்தா<லும், என்னிடத்தில் வருவான். அவனுக்காக வாழ்வேன் என்கிறார்.*என்னையும், உங்களையும் சம்பந்தப்படுத்தி என் மனைவி, அ<லுவலகத்தி<லும், உறவினர்களிடமும் போட்ட பழியை மறந்து, நான் மட்டும் எப்படி ஒருவரை மறுமணம் செய்து, சந்தோஷமாக வாழ முடியும் என்கிறார்.இப்படி சொல்லிவந்த அவர், தற்போது என்னிடம், நாமே திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறார்.அவரது முடிவை துணிந்து ஏற்றுக் கொள்வதா? ஏற்றுக் கொள்ளும் சூழலில், என் பிள்ளைகளிடம் இதை எப்படி கூறுவது? அவர்கள் ஏற்று கொள்ளாமல் போனால், என் நிலைமை என்னவாகும்?என் பிள்ளைகள் திருமணம் போன்ற, நல்ல நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் போய் விடுவரோ உறவினர்கள். துறை நபர்களை எப்படி எதிர் கொள்வது?அவர் பணிபுரியும் அலுவலகத்துக்கே வந்து, அசிங்கப்படுத்திய அவர் மனைவி, என்னை வந்து அசிங்கப்படுத்தினால் என்னவாகும்? இறுதியாக எங்கள் நட்பு என்னவாகும்? என்ற எண்ணற்ற கேள்விகளுக்கு, அம்மா தாங்கள் தான், ஏற்ற முடிவை சொல்லி, எனக்கு நிம்மதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.— இப்படிக்கு தங்கள் அன்பு மகள்.அன்புள்ள மகளுக்கு -—உன் கடிதம் கிடைத்தது.உன் பதினைந்தாவது வயதில் மணம் செய்துவித்து, 22 வயதில், 'விதவைப் பட்டம் சுமக்க வைத்து விட்டார் அம்மா...' என்கிற தீராகோபம் அம்மாவின் மீதிருக்கிறது உனக்கு. கடந்த 14 வருடங்களாக, நான்கு மகன்களுடன், வாழ்க்கை சாகரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறாய். உன் மகன்களுக்கு வயது முறையே, 20, 18, 15, 12 இருக்கலாம்.உன் தாயிடம், நீ ஆயுட்கால அடிமையாக இருந்ததாக ஆலாபித்திருக்கிறாய். உன் தந்தை விபத்தில் இறந்த பின், சூழ்நிலைகளின் நிர்பந்தங்களின் பேரில், உனக்கு, 15 வயதில் மணம் செய்து வைத்திருக்கிறார் உன் அம்மா. முழுக்க, முழுக்க உனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கிறார். உன் அம்மாவிடம் இருக்கும் அறிவுக் கூர்மைதான், நீ மத்திய அரசு தேர்வை எழுதி, வேலையையும் பெற்றிருக்கிறாய். நான்கு மகன்கள் வளர்ப்பிலும், உன் தாயின் பங்கு கணிசமாக இருந்திருக்கிறது. ஆகவே, அவர்கள் உன் மீது ஒட்டுதல் இல்லாமல், பாட்டியின் மீது ஒட்டுதலாக வளர்ந்திருக்கின்றனர்.உன் தாயாரின் மரணத்திற்கு, கீழ்க்கண்ட இரு விஷயங்களே காரணமாய் இருந்திருக்கும். ஒன்று, மகளுக்கு இன்னொரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்தான். ஆனால், இவளுக்கு நாலு மகன்கள், அலுவலக நண்பருக்கு ஒரு மகன் இருக்கின்றனர். ஐவரின் எதிர்காலத்தையும் அல்லவா இவர்களின் உறவு விழுங்கி விடும்.விவாகரத்து பெற்ற பின் கூட, அலுவலக நண்பரின் முன்னாள் மனைவி, நம் மகளை பழி வாங்குவாளே என, உ<ன் அம்மா நினைத்திருப்பார்.அ<லுவலக நண்பரை, நீ மறுமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு வருவோம். நீ முதலில் அம்மாவின் புகைப்படம், பின் மதுரை மீனாட்சியை வணங்கிவிட்டு, ஒரு விடுமுறை நாளில், உன் நான்கு மகன்களை கூட்டிப் பேசு. அவர்களின் எதிர் காலத்தை, கண்ணியத்தை உங்களது திருமணம் சீர்குலைக்காது என உறுதி கூறு. மகன்கள் நால்வரும் உங்களது திருமணத்தை ஆதரிக்கா விட்டால், திருமண யோசனையை கைவிட்டு விடு. மகன்கள் உன் திருமணத்திற்கு ஒப்புதல் கொடுத்து விட்டால், உறவினர்கள், துறை நபர்களை பற்றிய கவலையை உதறு.உன் நண்பரிடம் செட்டில்மென்ட் பேசி, பெரிய தொகை வாங்கிக்கொண்டு விவாகரத்து செய்து விட்டார் உங்கள் நண்பரின் மனைவி. அவர், உங்களது திருமணத்திற்கு பிறகு வந்து தொந்தரவு கொடுக்க சிறிதும் வாய்ப்பில்லை. மீறி வந்தால், போலீசில் புகார் கொடுத்து நிவாரணம் பெறலாம்.இறுதியாக, 'எங்கள் திருமணம் நடந்தால், எங்கள் நட்பு என்னவாகும்...' என்று கேட்டிருந்தாய். உங்கள் நட்பின் அடிப்படையே, எதிரின கவர்ச்சிதான். 'ஆஹா... இவன் நம் கணவனாய் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே...' என நீயும். 'இவள் நம் மனைவியாய் இருந்திருந்தால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமே...' என, உன் நண்பரும், ஆழ்மனதில் நினைத்துதான், நட்பை தொடங்கியிருக்கிறீர்கள். நட்பு என்கிற காய் பழுத்து, திருமணம் என்கிற கனியாக மாறியிருக்கிறது.மகன்கள் ஒப்புதலோடு, திருமணத்தை முடிக்க வாழ்த்துக்கள் மகளே!— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.***