லட்சங்களை விரும்பாத டிராபிக் போலீசார்!
டிராபிக் போலீசார் என்றாலே, வாகன ஓட்டிகளுக்கு நடுக்கம்தான். காரணம், வண்டியை மடக்கி, ஏதாவது காரணம் கூறி, பணம் வசூலித்து விடுவர். ஆனால், டிராபிக் போலீசார் எல்லாருமே அப்படிப்பட்டவர்கள் அல்ல; அவர்களில் நல்லவர்களும் உண்டு என நிரூபித்துள்ளனர் மும்பை நகரைச் சேர்நத இரண்டு போலீஸ்காரர்கள். மும்பை, ஒர்லி காவல் நிலையத்தில், டிராபிக் பிரிவில், சிந்தாமணி ஜாதவ், சுனில் பக்தாரே என்று இரண்டு போலீஸ்காரர்கள் பணியாற்றுகின்றனர். ஏப்ரல், 25ம் தேதி வழக்கமாக ரோந்து செல்லும் போது, 'நோ பார்க்கிங்' பகுதி ஒன்றில், இன்னோவா கார் ஒன்று நின்றிருந்தது; அதன் உரிமையாளர் அருகில் இல்லை. எனவே, அந்த காரை தங்கள் காவல் நிலையத்துக்கு இழுத்து வந்தனர். இரண்டு நாட்களாக காரை தேடி யாரும் வரவில்லை. எனவே, காரின் உரிமையாளர் பற்றிய தகவல் ஏதும் கிடைக்குமா என தெரிந்து கொள்ள, கார் கண்ணாடியை உடைத்து, காரை திறந்தனர். காரில், ஒரு சூட்கேசில், 28 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் இருந்தது; அதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பணத்தை அவர்கள் சுலபமாக சுருட்டியிருக்க முடியும். ஆனால், அந்த கடமை தவறாத இருவரும், பணத்தை அப்படியே உயர் அதிகாரிகளிடம் கொடுத் தனர். இரண்டு போலீஸ்காரர்ளகளுக்கும் தலா, 1,000 ரூபாய் பரிசு வழங்கி, பாராட்டினர் உயர் அதிகாரிகள். — ஜோல்னா பையன்.