உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு, நான், 32 வயது பெண். எனக்கும், என் கணவருக்கும் திருமணமாகி, ஏழு ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு, ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன், 'ஆட்டிசம்' குறைபாடு உள்ளவன். எங்கள், மாமனார்-மாமியார் எங்களுக்கு எந்த விதமான ஒத்தாசையும் செய்வதில்லை. என் மாமனாருக்கு, 65 வயதும், மாமியாருக்கு, 53 வயதும் ஆகிறது. என் கணவர் படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்து, 11 ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர், வேலையில் சேர்ந்த உடனே, தான் செய்து வந்த வேலையை விட்டு விட்டார், என் மாமனார். அப்போது இருந்தே கணவர் தான் வீட்டு நிர்வாகத்தை கவனித்து வருகிறார். தன் தங்கைக்கு, கடன் வாங்கி திருமணம் செய்து வைத்தார். அவர்களிடம் எந்தவிதமான சொத்தும் இல்லை. நானும், என் கணவரும், ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து, குடும்பத்திற்கு தேவையான சகலத்தையும் கவனித்து வந்தோம். குடும்ப கடன்களையும் அடைத்தோம். மாமனார்-மாமியாரையும் நன்றாக கவனித்துக் கொண்டோம். ஆனால், எங்களிடமிருந்து பணம் கறப்பதில் மட்டும் குறியாக இருக்கின்றனர். நான், என் மகனை பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்டு நின்று, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. என் மாமனார்-மாமியார் தனியாக குடி போய் விட்டனர். 'மாதா மாதம், 15 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு தந்துவிட வேண்டும்...' என்று காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டனர். மேலும், அந்தப் புகாரில் நானும், என் கணவரும் மாதம், ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறோம் என்று பொய் கூறி இருக்கின்றனர். அவர்கள், எங்களை விட்டு பிரிந்ததிலிருந்து, மாதம், ஏழாயிரம் ரூபாய் கொடுத்து வருகிறோம். அவர்கள் குடியிருக்கும் வாடகை வீட்டுக்கும், முன்பணம் 40 ஆயிரம் ரூபாய் நாங்கள் தான் கொடுத்தோம். எங்கள் மகனின் மருத்துவ செலவுக்கு மாதா மாதம் பெரும் தொகை செலவிட வேண்டி இருக்கிறது. ஆனால், பேரனை பற்றியோ, எங்கள் நிலைமையை பற்றியோ எந்த விதமான அக்கறையும் இல்லாமல், 'எங்களுக்கு வேண்டியது எல்லாம் பணம். எங்களுக்கு தேவையான பணம் கொடுப்பதற்காகவே, எங்கள் மகனை நாங்கள் படிக்க வைத்தோம்...' என்று பலமுறை கூறி இருக்கின்றனர். என் நாத்தனாரும், தன் பெற்றோருடன் சேர்ந்து, 'எங்களுக்கு எல்லாம் நீங்க தான் செய்ய வேண்டும்...' என்று மனரீதியாகவும், பண ரீதியாகவும் எங்களை மிகவும் சிரமப்படுத்துகிறார். எங்களை நிம்மதியாக வாழ விடக்கூடாது என்பதில், அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். மகன் மற்றும் பேரன் மீது பாசமில்லாமல், கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும்? என்னால், குழந்தையையும் பார்த்துக்கொண்டு, இவர்கள் செய்யும், 'டார்ச்சரை'யும் சமாளிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து நானும், என் கணவரும் நிம்மதியாக வாழ வழி கூறுங்கள், அம்மா. - இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு, உன் மாமனார் வேலையை விட்டது, மகனின் சம்பாத்தியத்தில் வாழ்வதற்காக அல்ல. ஏதோ ஒரு பிரதான உடல்நலக்குறைவு அவரை உள்ளும்புறமும் வாட்டி இருக்கலாம். உடல்நலக்குறைவுற்ற அவரை விருப்ப ஓய்வு பெறச்சொல்லி அவர் பணிபுரிந்த நிறுவனமே வற்புறுத்தி இருக்கலாம். உன் மாமனார் பார்த்த வேலை என்ன என்று சொல். அவர் எதனால் வேலையை விட்டார் என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கிறேன். பொதுவாக வேலை பார்க்கும் பெண்களில், 50 சதவீதம் பேர் திருமணம், கர்ப்பம்-, பிரசவம் மற்றும் -குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி, பொறுப்பு துறப்பு செய்கின்றனர். நீ தொடர்ந்து வேலைக்கு போய் கொண்டிருந்தால் சம்பளத்தில், 20 சதவீதம் செலவு செய்து, உன் மகனுக்கு ராஜ வைத்தியம் செய்யலாம். மகனை கவனித்துக் கொள்ள ஆயாவோ, 'ஹோம் நர்ஸோ' அமர்த்தலாம். உன் பெற்றோருக்கு எத்தனை பிள்ளைகள்? உன் பெற்றோர், பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களா? அவர்கள் உன்னிடம் உதவி ஏதும் கேட்டதில்லையா? அவர்கள் கேட்கா விட்டாலும் அவர்களுக்கு நீ எதுவும் உதவிகள் செய்ததில்லையா? உன் பெற்றோரையும், உன் மாமனார்-மாமியாரையும் ஒரே தராசில் வைத்து பார்க்க தெரியவில்லை உனக்கு. 11 ஆண்டுகளாக பணி செய்யும் உன் கணவர் குறைந்தபட்சம் மாதம், 75 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பார். அதில் ஒரு, 10 சதவீதத்தை மாமனார்-மாமியாருக்கு கொடுக்கலாமே! உன், மாமனார்-மாமியார் உங்கள் சம்பாத்தியத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகளாக இருக்கின்றனர் என்றே வைத்துக் கொள்வோம். தவணை முறையில் ஒரு பொருளை வாங்கினால், அதற்கு மாதாமாதம் இ.எம்.ஐ., கட்டுவாய் இல்லையா? உன் கணவரை 'மாமனார்-மாமியார் அண்ட் கோ'விடமிருந்து தவணை முறையில் வாங்கிய நீ, மாதம் ஏழாயிரம் ரூபாய் இ.எம்.ஐ., கட்டுவதாக பாவித்து, நிம்மதி பெறு. தினம் தினம் பணம் கேட்டால் நாசுக்காக இல்லை என மறுத்து விடு. வாடகை தவிர மேற்செலவு இரண்டாயிரம் மட்டும் மாதாமாதம் கொடு. மீண்டும் வேலைக்குப் போ. ஒருகண் வேலை, மறுகண் ஆட்டிச மகன் என, உன் தினப்படி வாழ்வை, 'பேலன்ஸ்' செய். நாத்தனாருடன் தாமரை இலை தண்ணீர் போல உறவை வைத்துக் கொள். உன் மகனுக்கு, 'ஸ்பீச் தெரபி' கொடு. 'ஆன்லைன்' வகுப்புகளில் சேர். பணம் செலவாகிறதே என, புலம்பாதே. வாழ்வின் சிறுசிறு சந்தோஷங்களை அனுபவிக்க பழகு. எல்லா பிரச்னைகளும் சிலகாலம் தான். - என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத். @block_B@ � உணவை விலைக்கு வாங்கலாம்; பசியை விலைக்கு வாங்க முடியாது. — டாக்டர் ஹில்@@block_B@@@block_B@ �  பிறர் தவறை சகிக்கும் போது, நீ மனிதன்; அதை மன்னிக்கும் போது, தேவன். — போவீ@@block_B@@


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kavitha
ஜூலை 29, 2026 09:30

ஆட்டிசம் autism பாதிப்புள்ள குழந்தையை வளர்ப்பது எவ்வளவு கடினமானது என்று தெரிந்தவர்களுக்கு அந்தப் பெண்ணின் வலி புரியும். "எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது" என்ற காரணத்தைக் கூறி அவர் வேலையை விட்டது ஒருவித தப்பித்து ஓடும் மனப்பான்மை escapism என்று சிலர் நினைக்கலாம் ஆனால் அது அப்படி அல்ல. உலகம் முழுவதும் ஆட்டிசம் என்றால் என்னவென்று கேட்டுக்கொண்டிருக்க, அதைத் திரும்பத் திரும்ப விளக்கி அவர் சோர்வடைந்திருந்த நிலையில், அவரது கணவரின் குடும்பத்தாரும் மாமனார்-மாமியார் அவர்களைக் கைவிட்டபோது அவர் முற்றிலும் நிராதரவாக உணர்ந்தார் அந்த வலி அளவிட முடியாதது. மேலும், அவரது கணவரின் சம்பளத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் அது அரசு வேலையாகத் தெரியவில்லை. மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களே ஊழியர்களைச் சாதாரணமாக வேலையை விட்டு நீக்கும் சூழலில், அதனால் பலர் நிதி நெருக்கடியைச் சந்திப்பதை நாம் பார்க்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தக் குழந்தையின் எதிர்காலம் மற்றும் அதற்கான சிகிச்சைச் செலவுகள் என்னவாகும்? வீட்டில் ஒரு செவிலியரையோ அல்லது உதவியாளரையோ aaya நியமிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தங்கள் சொந்தப் பேரக் குழந்தையைப் பராமரிக்கவே மறுத்துவிட்ட குடும்பத்தினர் இருக்கும்போது, ​​அவர்கள் மட்டும் எப்படிச் சிறந்த முடிவுகளை எட்ட முடியும்? பெற்றோர் ஆதரவு இல்லாத கடினமான சூழலிலும், அந்த மகன் தன்னால் முடிந்த நியாயமான தொகையைத்தான் அனுப்பி வருகிறார் என்று தோன்றுகிறது. ஒரு குழந்தையை வளர்க்க ஒரு சமூகமே தேவைப்படும் நிலையில், ஒரு சிறப்புத் தேவை கொண்ட குழந்தையைப் பொறுத்தவரை, பெற்றோர் மட்டுமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. தாத்தா-பாட்டி கூட உதவாத நிலையில், அவர்கள் தங்கள் பிள்ளைகளிடமிருந்து எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறார்கள். மாமனார்-மாமியாருக்குத் தங்கள் மகன் மற்றும் பேரக்குழந்தை மீது உண்மையான அன்பு இருந்திருந்தால், அவர்கள் அவர்களைக் கைவிட்டிருக்க மாட்டார்கள் அதோடு, 15,000 ரூபாய் கேட்டுத் துன்புறுத்தியிருக்கவும் மாட்டார்கள். முதியோர் நலச் சட்டத்தின்படி, அதிகபட்சத் தொகையே 10,000 ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


தாமரை மலர்கிறது
ஜூலை 27, 2026 22:57

ஒரு குழந்தையை பெற்று வளர்த்து, படிக்க வைப்பது கடமை என்றாலும், வயதான காலத்தில், பென்சன் இல்லாதபோது, அந்த குழந்தையிடமிருந்து ஒரு சிறிய பொருளாதார உதவியை பெற்றோர் எதிர்பார்ப்பது தவறல்ல. ஆட்டிசம் குழந்தை இருந்தாலும், மகனின் அனைத்து வருமானமும் அவனின் குடும்பத்திற்கு மட்டும் தான் என்பது சரியல்ல. மகன் பத்து சதவீதத்தை தான் பெற்றோருக்கு கொடுக்கிறான். இருபத்தைந்து சதவீதம் பெற்றோர் கேட்டால், தவறு எனலாம். ஆட்டிசம் குழந்தையை நீங்கள் பார்த்துக்கொள்வதற்கு பாராட்டுக்கள். ஆனால் உங்களின் கணவரின் பெற்றோரும் வாழவேண்டும். அப்போது தான் நீங்களும் நன்றாக வாழமுடியும். பகிர்ந்து வாழ்வதே சரியான வாழ்க்கை.


chennai sivakumar
ஜூலை 26, 2026 18:51

ஆட்டிசம் குழந்தையை வளர்ப்பது நிச்சயமாக நரகமே. அதுவும் இரட்டையாய் இருந்தால் அம்போ. என் cousin அண்ணன் மகள் அவஸ்தை பட்டு கொண்டு இருக்கிறார். பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. நான் அவர்கள் வீட்டுக்கு வருவதை கூட மறைமுகமாகவிரும்பவில்லை. என்ன செய்வது?


நிக்கோல்தாம்சன்
ஜூலை 26, 2026 09:31

மிகுந்த வேதனையான நேரம் நாங்கள் பெங்களூரில் இருந்தபோது எங்களது அபார்ட்மெண்டில் மேல்மாடியில் ஒரு மலையாள தாய் அவரது ஆட்டிசம் பாதித்த மகனோடு வாழ்ந்தார் அவன் எப்பொழுதும் எச்சிலை துப்புவது , அவனது கழிவுகளை எடுத்து எண்களின் பால்கனியில் எறிவது போன்று இருந்ததால் அந்த வீட்டின் ஓனரிடம் சொல்லி வேதனைப்பட்டோம் ஆனால் அந்த தாயின் மாமியாரோ வந்து எங்களிடம் சண்டை போட்டாள் , அப்போது என் கணவர் அவ்வளவு அக்கறையாக இருந்தால் உனது வீடே பெரிதுதான் அங்கேயே வைத்து கொள்ளலாமே ஏன் எண்களின் உயிரை எடுக்கிறீர்கள் என்று கேட்டார் , அதற்க்கு அந்த மாமியார் ஆடிய ஆட்டம் எப்பா சொல்லி மாளாது , ஆட்டிசம் பாதித்த குழந்தையைவிட அந்த உறவினர்களின் நடத்தை தான் வேதனைக்குரியது என்பதனை சொல்ல முடியவில்லை


jeeva
ஜூலை 26, 2026 09:07

சகுந்தலா மேடம், ஆட்டிசம் கொண்ட ஒரு குழந்தையை வளர்ப்பது நரகத்தில் வாழ்வதைப் போன்றது. ஒரு நாள் ஆட்டிசம் குடும்பத்துடன் இருந்து அவர்களின் போராட்டத்தை நேரில் பார்த்து புரிந்துகொள்ளுங்கள். தயவுசெய்து தாய்மார்களை எளிதாக குறை சொல்லாதீர்கள். பெரியவர்களையோ அல்லது மைத்துனியையோ கண்மூடித்தனமாக ஆதரிக்காதீர்கள். உங்கள் இந்த பதில் மிகவும் வருத்தத்தை அளித்தது.


Kavitha
ஜூலை 27, 2026 01:03

எனக்கும் அது தான் தோன்றியது.