* அ.செல்வகுமார், சென்னை: முப்படை தலைமை தளபதியாக, தமிழகத்தை சேர்ந்த, ராஜா சுப்ரமணியும், இந்திய கடற்படையின் அடுத்த தலைமை தளபதியாக, வைஸ் அட்மிரல் கிருஷ்ணா ஸ்வாமிநாதன் பதவி ஏற்றதும், தமிழகத்துக்கு பெருமை தானே! மிக மிக பெருமை! பொறுப்புடன் செயல்பட்டு, உயர்பதவிகளை பெறுவதில் நம் தமிழர்கள், என்றுமே சளைத்தவர்கள் அல்ல!
ஏ.ருக்குமணி, கோவை: சூரியசக்தி மின் உற்பத்தியில், தென் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதே... நல்ல முயற்சியால் விளைந்த பயன் இது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களை மேலும் கண்டெடுத்து, அவற்றில் சூரிய சக்தி மின் நிலையங்களை அமைத்தால், ஏகப்பட்ட வருமானம் கிடைக்கும். 'டாஸ்மாக்' வருமானத்தைத் தவிர்க்க, பல திட்டங்களில் ஒன்றாக இந்த திட்டத்தையும், ஆளுங்கட்சி மேற்கொண்டால், மிக மிக நல்லது!
* கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள், முக்கிய சாலை ஓரங்களில் தான் இருக்கின்றன. அதுபோன்ற பள்ளிகளைச் சுற்றி உள்ள பகுதிகளில், வரையறுக்கப்பட்ட நடைபாதை, 'ஜீப்ரா கிராசிங்' மற்றும் வேகக் கட்டுப்பாடு போன்ற சாலை பாதுகாப்புக் குறியீடுகளை வரைந்து வைத்தால் என்ன? கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் இவை. இதைச் செய்வதைத் தவிர்த்து, 'ரப்பர்' மற்றும் 'பிளாஸ்டிக்' ஆகியவற்றில், வாகனங்கள் லாவகமாக இயங்க முடியாத வகையில், சாலைகளில், 'ஸ்பீடு பிரேக்கர்'கள் போடப்பட்டுள்ளன. மாணவர் நலன் முக்கியம் என்பதை, ஆளும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்!
வி.குமாரி, சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய், 'போக்சோ' வழக்கில் சிக்கிய தன் மகன், பண்டி சாயை, போலீசில் ஒப்படைத்துள்ளது குறித்து... சிறப்பான செயல்! மற்ற அமைச்சர்களும் இவரைப் போல் செயல்பட்டால், 'அமைச்சரின் மகன், மகள்; அமைச்சரின் உறவினர்' என, 'கெத்து' காட்டாமல், அவர்களது வாரிசுகள், சட்டத்தை மதிப்பர்!
* எஸ்.தியாகராஜன், மகாபலிபுரம்: 'பாலியல் குற்றவாளிகளின் மரண தண்டனையை மக்கள் முன்னிலையில் நிறைவேற்ற வேண்டும்...' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், சரத்குமார் கூறியுள்ளாரே... முதன்முறையாக, தெளிவாக பேசி இருக்கிறார், சரத்குமார். ஏற்கனவே கூறியபடி, 'மாமியார் கனவில் வந்து கூறினார்; மனைவியை நள்ளிரவில் எழுப்பி யோசனை கேட்டேன்...' என, இப்போது கூறவில்லை. நம்மூரில், இது சாத்தியப்படாது என்றாலும், சரத்குமாரின் சமூக அக்கறைக்கு ஒரு, 'ராயல் சல்யூட்! '
ஆர்.பானுலதா, சென்னை: மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, விஜய் கட்சியான த.வெ.க.,வில் இணைகிறாராமே... மதுரைக்கு ஒரு, மேயர் பதவி, 'பார்சல்!'
அ.செல்வகுமார், சென்னை: பிரதமர் மோடி அறிவுறுத்தலின்படி, 'டூ- வீலர்' தவிர்த்து, சைக்கிளை பயன்படுத்துகிறேன். என்னை பாராட்டுவீர்களா, அந்துமணி? சபாஷ், செல்வகுமார்! நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் உங்களைப் போல செயல்படத் துவங்கினால், நம் பொருளாதார வளம் விண்ணை முட்டும்; நம் உடல் ஆரோக்கியமும் மேம்படும்!
டி.சுதாகர், ராமநாதபுரம்: ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசின் கஜானாவில் சேர்த்தால், தமிழகத்தின் நிதிநிலை சீராகும் தானே... கண்டிப்பாக! ஆனால், அது நடக்க வாய்ப்பே இல்லை என்பது, உங்களுக்கும் தெரியும் தானே, சுதாகர்? புதிய அரசு முயன்றால், ஒருவேளை சாத்தியப்படலாம்!
யு.பார்த்திபன், விளாத்திகுளம்: 'விஜயை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது இளைஞர் பட்டாளம் தான். அதனால், கட்சியில், இளைஞர்களை அதிகமாக சேருங்கள்...' என, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கட்டளையிட்டுள்ளனவே... இந்த இரு கட்சிகளிலும், பழம் தின்று கொட்டை போட்ட பெரிசுகளுக்கு, இனி கல்தா தான் என்பது புரிந்து விட்டது, பார்த்தி!
எஸ்.வி.சம்பந்தம், திருச்சி: 'பா.ம.க., மற்றும் த.வெ.க.,வின் கொள்கைகள், 90 சதவீதம் ஒன்று தான்...' என்கிறார், அன்புமணி. பிறகு ஏன், விஜய் ஆட்சி அமைக்க, அன்புமணி ஆதரவு தரவில்லை?யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய், மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால், தங்களது, 'ஸ்டிக்கரை' எல்லா கட்சிகளும், விஜய் கட்சி மீது ஒட்டப் பார்க்கின்றன!
* உ.பார்த்திபன், துாத்துக்குடி: 'தினமும், சென்னை, நேரு ஸ்டேடியத்தில் யார் வேண்டுமானாலும் வந்து என்னைப் பார்க்கலாம்...' என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறாரே... சென்னையில் மட்டுமல்ல; ஒவ்வொரு மாவட்டத்திலும், முடிந்தால், 'மைக்ரோ லெவலில்' கிராமங்களிலும், விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுத்து, மாணவர்களை ஓடி ஆடி விளையாட ஏற்பாடு செய்தால், மொபைல் போனில் மூழ்கும், போதைக்கு அடிமையாகும், சின்னஞ்சிறுசுகள் வாழ்வு வீணாவதைத் தடுக்கலாம். ஆதவ் அர்ஜுனா முயற்சி செய்தால் நடக்கும். பள்ளிகளோடு இணைந்தால் இன்னும் சிறப்பு!
த.நேரு, வெண்கரும்பூர்: ஏழை எளிய மக்களின் இதயங்களில் என்றும், 'தினமலர்' இடம்பிடிக்க, காரணம் என்ன, அந்துமணி? 'உண்மையின் உரைகல்' என்பதை நிரூபிக்கும் வகையில் செய்திகள் வெளியிடுவதால், வாசக முதலாளிகளாகிய உங்கள் மனதில், நீங்கா இடம் பெற்றுள்ளது, 'தினமலர்!'
* செ.காமாட்சி, காங்கயம்: பார்லி., மற்றும் சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், ஏழு லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான, பார்லி., கூட்டுக்குழு தலைவர், சவுத்ரி கூறியுள்ளாரே... செயல்படுத்தப்பட வேண்டிய மிக நல்ல திட்டம் இது. இடைத்தேர்தல் என்ற திட்டத்தையும் ரத்து செய்தால், மிக மிக நல்லது. எந்த கட்சியும் ஆட்டம் போடாமல், மக்கள் சேவை செய்யும் வகையில் மடைமாறி விடுவர்!
* ப.சோமசுந்தரம், சென்னை: 'கற்பனை செய்ய முடியாத அளவிற்கு, விலைவாசி உயர்ந்துள்ளது...' என, மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே ... உண்மை தான்; அன்னியச் செலாவணியை கட்டுப்படுத்தாமல் போனால், நாட்டிற்கு மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படும். அதற்கு தான், 'இன்னும் ஓராண்டுக்கு, தங்கம் இறக்குமதியை தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்...' என, பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார். அப்படி கட்டுப் படுத்தவில்லை எனில், விலைவாசி விண்ணைத் தொட்டுவிடும். தவிர்ப்போ ம் வெளிநாட்டு பொருட்களை!
* ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல், மகளிர் உரிமைத் தொகையை, 1,000 ரூபாயிலிருந்து, 2,500 ரூபாயாக உயர்த்தி, பெண்களின் வங்கிக் கணக்கிலும் போட்டுவிட்டாரே... இது தான் அரசியல் அனுபவம் என்பதோ? புதுச்சேரியை இதற்கு முன் ஆட்சி செய்தவரும், இதே ரங்கசாமி தான். மாநிலத்தின் நிதி நிலையை, சரிவர பராமரித்துள்ளார். அதனால், மகளிர் உரிமைத்தொகை திட்டம் சாத்தியமாகி உள்ளது!
மு.நாகூர், ராமநாதபுரம்: 'ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப் படும் பணிகளை, 'வீடியோ' பதிவு செய்து, 'பென்டிரைவ்' சமர்ப்பித்த பின்னரே, 'பில் செட்டில்' செய்ய வேண்டும்...' என, அதிகாரிகளுக்கு, அமைச்சர், புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளாரே... ஆக்கப்பூர்வமான பல நிர்வாக நடைமுறைகளை பின்பற்றுகின்றனர், த.வெ.க., ஆட்சியினர். அவற்றை, தொய்வு இன்றி, அதிகாரிகளும் பின்பற்றினால், நம் தமிழகம், நாலு கால் பாய்ச்சலில் முன்னேறும். முன்னாள் முதல்வர், ராஜாஜி சொன்னது போல், தலைமைச் செயலகத்தை, கட்சியினரும், இடைத்தரகர்களும் மொய்க்காமல் இருப்பர்; மொய்த்தாலும், சிக்கி விடுவர்!
எம்.மரிக்கொழுந்து, திருவாரூர்: 'எல்லாரையும், எல்லா காலமும் ஏமாற்ற முடியாது...' என, தி.மு.க.,வின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளாரே... இப்போதாவது, இப்படியொரு தெளிவு வந்ததே ஸ்டாலினுக்கு... பாராட்டுவோம்!
பா.ஜெயப்பிரகாஷ், தேனி: 'தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்து, தமிழோடு விளையாடும் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை...' என, தி.மு.க.,வின், ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளது குறித்து... அது சரி... தமிழ்த்தாய் வாழ்த்தின், உண்மையான வார்த்தைகளை நீக்கி, தனக்கேற்றவாறு வசதியாக மாற்றி அமைத்தது யார்... எல்லாம் அந்த தி.மு.க., முன்னாள் தலைவர், கருணாநிதிக்கே வெளிச்சம்! * பா.அனுமந்த்ரா, சென்னை: முந்தைய திராவிட மாடல் அரசைப்போல், மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்காமல், இணக்கமாக நடந்து, தமிழகத்துக்கு தேவையான நிதியைக் கேட்டுப் பெறுவாரா, முதல்வர் விஜய்?
மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படும் எந்த முதல்வரும், மாநில அரசு திட்டமோ... மத்திய அரசு திட்டமோ... அது மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தால், அரசியல் சாயம் பூசாமல், 'கொளுகை, களுகை' என வசனம் பேசாமல், நறுக்குத் தெறித்தாற் போல் செயலாற்றி, மத்திய அரசிடம் நிதி பெறலாம்; அதை, விஜய் செய்வார் என நம்புவோம்! வீ.பார்வதி, சென்னை: தி.மு.க., உதயநிதி, மீண்டும் சினிமாவில் நடிக்கப் போகிறாராமே... யாருக்கு நன்மை? உதயநிதிக்கு தான்! காசுக்கு காசும் ஆச்சு; இழந்த செல்வாக்கை மீட்டெடுத்தது போலவும் ஆச்சு! ஆனாலும், விஜய் போல, 'மாஸ் ஹீரோ'வாக ஆசைப்படுவதெல்லாம், உதயநிதிக்கு வெறும் கனவாகவே முடிந்து விடும்!
ஆர்.ஜெயகுமாரி, சென்னை: நகை வியாபாரிகள், மக்களிடம் இருக்கும், பழைய தங்க நகைகளை வாங்க, ஆர்வம் காட்டுவது ஏன்? பழைய நகைகளில், செப்பு கலப்பு குறைவாகவே இருக்கும்; தங்கம் அதிகமாக இருக்கும். வியாபாரிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி, பழைய நகைகளை அவர்களுக்கு விற்றால், நாம் தான் ஏமாளி; அவற்றை விற்காமல், 'பாலிஷ்' போட்டு பயன்படுத்தலாம்!