இது உங்கள் இடம்!
'வாய்ஸ் குளோனிங்' மோசடி உஷார்!'சைபர் கிரைம்' பிரிவில் பணியாற்றும் ஆண் உறவினர் ஒருவருடன் பேசும் போது, 'வாய்ஸ் க்ளோனிங்' என்ற சமீபத்திய புதுவித மோசடி பற்றி கூறினார்...'செயற்கை நுண்ணறிவைத் தவறாகப் பயன்படுத்தும் மோசடிக் கும்பல், தெரியாத எண்ணிலிருந்து திடீரென நமக்கு மொபைல் போனில் அழைப்பு விடுக்கும். நாம் அழைப்பை ஏற்று, 'ஹலோ... ஹலோ...' என்று சொன்னாலே போதும், நம் குரல், அவர்களது மொபைல் போனில் பதிவாகி விடும். பதிவான குரலை வைத்து, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கொண்டு, அவர்களுக்கு தேவையான வாக்கியத்தை உருவாக்கி விடுவர். அதாவது, 'உடனே பணம் அனுப்புங்க...' என, நாமே சொல்வது போல், உருவாக்கி விடுவர்.'பின் நம்முடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என, யாருக்காவது இந்த அழைப்பு செல்லும்.'அவர்களிடம், நம் குரலிலேயே, 'ஆக்சிடென்ட் ஆகிடுச்சு, உடனே பணம் அனுப்புங்க...' என்றோ, 'தவறுதலாக சிக்னல் தாண்டியதாலே வண்டியை போலீஸ்ல பிடிச்சிட்டாங்க, பணம் கட்ட வேண்டியுள்ளது...' என்றோ கூறுவர். பதறிப்போய், அவர்கள் எண்ணுக்கு யு.பி.ஐ., மூலம் பணம் அனுப்பிவிடுவர். பணம் போன பிறகு தான், அது, மோசடி என்பதே தெரிய வரும்.'நடப்பாண்டில் மட்டும் மும்பை, டில்லி, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற நகரங்களில், இதுபோன்ற மோசடியில் பலர், கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.'நண்பர்கள், தெரிந்தவர் மற்றும் குடும்பத்தினரிடம் பேசுகிறவர்கள், 'அவசர பணம் தேவை...' என, கேட்டு அழைப்பு வந்தால், நம்மிடம் பேசுவது சம்பந்தப்பட்ட நபர்தானா என்று உறுதி செய்து கொள்ள, உடனே, வீடியோ அழைப்பில் சம்பந்தப்பட்டவரை, தொடர்பு கொண்டு பேசுங்கள். வீடியோ அழைப்பை எடுக்கவில்லை என்றால், அது மோசடி என்று புரிந்து, அழைப்பை, 'கட்' செய்துவிடுங்கள்...' என்றார், அந்த, உறவினர்.வாசகர்களே... இந்த புதுவித மோசடியில் சிக்காமல் எச்சரிக்கையாக இருங்கள்.எஸ்.அலமேலு, கள்ளக்குறிச்சி.இப்படியும் செய்யலாம் சமூக சேவை!சமீபத்தில், கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். காலை நேரத்தில், 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தேன். அப்போது, வயல்வெளி ஒன்றில், நான்கு இளைஞர்கள், அந்த நில உரிமையாளருடன் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை கண்டேன். அவர்களில் ஒரு இளைஞனை அழைத்து விசாரித்தேன்.அதற்கு, 'நாங்கள் நால்வரும் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கள் கிராமங்களுக்கு வந்து, கைவிடப்பட்ட மற்றும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் எங்கெல்லாம் இருக்குன்னு பார்த்து, அதன் உரிமையாளரிடம் மூடப்படாத கிணறுகளால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறி, அதை மூடச் செய்வோம். உரிமையாளர்கள் யாரும் இல்லாத நிலங்களில், எங்கள் செலவிலேயே அதை மூட ஏற்பாடும் செய்வோம். இதனால், ஒரு உயிர் பிழைத்தால் கூட, எங்களுக்கு சந்தோஷம் தான். எங்களால் முடிந்த சமூக சேவை சார்...' என்றான், அந்த இளைஞன்.விடுமுறை நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து சரக்கு அடித்துவிட்டு, ஊர் சுற்றும் இளைஞர்களுக்கு மத்தியில், இத்தகைய சமூக சேவை செய்யும் அந்த இளைஞர்களை மனதார பாராட்டினேன்.ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்.சொந்த பந்தங்களும் முக்கியம்!என் ஊரிலுள்ள ஆண் உறவினர், பணம் படைத்தவர். அதன் காரணமாக, சொந்த பந்தங்களை மதிக்காமல், எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுவார். அதேபோல சொந்த பந்தங்கள், அவர் வீட்டுக்கு சென்று, நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத்தாலும், அந்த நிகழ்வுகளில் அவரும், அவர் குடும்பத்தினரும் கலந்து கொள்ளமாட்டார்கள்.இந்நிலையில், தன்னுடைய மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார், உறவினர். நிச்சயதார்த்த விழாவிற்கு அனைவரையும் அழைத்தார். ஆனால், சொந்த பந்தங்கள் யாரும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.இதை பார்த்த மாப்பிள்ளை வீட்டினர், 'இத்தனை பணம் இருந்து என்ன பயன்? உங்களுக்கு சொந்த பந்தங்கள் யாரும் இல்லையா?' என்று கேட்டுள்ளனர்.'அனைவரும் திருமணத்துக்கு வருவர்...' என்று சொல்லி சமாளித்துள்ளார்.மேலும், மகளின் திருமணப் பத்திரிகையுடன் சொந்த பந்தங்கள் வீட்டுக்கு வந்தவர், மனம் வருந்தி, அவருடைய நடத்தைக்கு மன்னிப்பு கேட்டதுடன், 'அனைவரும் வந்திருந்து, மகளின் திருமணத்தை நடத்தி கொடுங்கள்...' என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.அவர் மனம் திருந்தியதை அடுத்து, சொந்த பந்தங்கள் அனைவரும் அவர் மகள் திருமணத்திற்கு சென்று சிறப்பாக நடத்தி கொடுத்தோம்.பணம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல சொந்த பந்தங்களும் மிகவும் முக்கியம்.ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.