உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: வாகையே உனக்கு வாகை சூடும்!

இளைஞனே... நீ அலையாய் இரு - அதற்காக கரைதாண்ட எண்ணாதே... கட்டுப்பாடு உன்னை விட்டுவிட்டு ஓடும்! நீ மலையாய் இரு - அதற்காக எல்லாரும் உந்தன் காலடிக்கு கீழ் தான் என கர்வம் கொள்ளாதே... காலமே உன்னைக் காணாமல் செய்து விடும்! நீ சிலையாய் இரு - அதற்காக கண்ணெதிரே நடக்கும் கயமைகள் கண்டு கண்மூடிக் கிடக்காதே... ஊருலகம் உன்னை வேறுலகம் அனுப்பிவிடும்! நீ விலையாய் இரு - அதற்காக தங்கத்தின் விலைபோல தாறுமாறாய் எகிறாதே... இல்லாதார் இதயங்களில் இல்லாமல் போய்விடுவாய்! நீ கலையாய் இரு - அதற்காக கலைமகளே நான்தானென கனவுலகில் மிதக்காதே... இறுமாப்பு உன்னை புதைக்குழிக்குள் தள்ளிவிடும்! நீ சுளையாய் இரு - அதற்காக பலாச்சுளையே நான்தானென பகல் வேஷம் போடாதே... இனிப்பென்பதே உன் வாழ்வில் இல்லாமல் மறைந்து விடும்! நீ நிலையாய் இரு - அதற்காக நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தானென்று முரண்டு பிடிக்காதே... ஒருவரும் உன்னோடு உறவுகொள்ள வரமாட்டார்! எங்கும் எதிலும் உன்னை முன்னிலைப்படுத்தாமல் உண்மையை முன்னிலைப்படுத்து! இயற்கையை வெல்ல எப்போதும் எண்ணாதே... இயன்றவரை எல்லாருக்கும் இரங்கிடப் பழகு! என்னதான் உன்னிடம் துணிவு இருந்தாலும் எப்போதும் கொஞ்சம் பணிவோடும் இரு! அதுபோதும் இளைஞனே... அதுபோதும் - இனி வெற்றிகள் பல உந்தன் விலாசம் தேடும்... வாகையே உனக்கொரு நாள் வாகை சூடும்! - மா.உதயகுமார், (காவல் உதவி ஆய்வாளர்) ஆவடி.தொடர்புக்கு: 9345410036


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !