உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: மரமெனும் மாதரசி!

மண்ணுக்கு சொந்தம் எதுவென தேடிப் பார்த்து மதி மயங்கிய போது கல் தோன்றி மண் தோன்றா காலம் தொட்டு கால் பதித்தவள் நீ! பூமிதனில் மரமென வளர்ந்தாய் அறிவியலும் உன்னிடத்தில் அபூர்வங்கள் பல கண்டு விட்டன! விண்ணை மறைக்குமளவுக்கு பசுமை மரப்பந்தல் இடுபவள் நீ... பாட்டாளி கூட்டத்திற்கு நிழல் பஞ்சணை விரித்து இலைச் சாமரம் வீசுபவள் நீ! முக்கனி சுவைதனை உன்னிடத்தில் கண்டோம்... புன்னகை வரத்தை பூமரங்களால் பூமிக்கு பரிசளித்தவள் நீ! மன்னுயிர்களுக்கு மட்டுமா... கைலாயநாதர் கழுத்தில் தொங்கும் ருத்ராட்ச மணியை அருட்கொடையாய் தருபவளும் நீயே! வஞ்சனையின்றி பலன்கள் வாரி வழங்கும் உனக்கு வந்த சோதனை எத்தனையெத்தனை நெஞ்சு பொறுக்குதில்லையே! பெருகிப் போன வாகனங்களும், மனிதர்களும் தடையின்றி பயணிக்க சாலையோர மரங்களோ காட்டுப் பகுதி மரங்களோ வாள் எடுத்து கண்டந்துண்டமாக்கிய கொடுமையை என்னவென்று சொல்ல! வெள்ளாமை விளைந்த இடம் வேலி காத்து நின்ற இடம் ஓரம் பாரம் பெருத்து ஒய்யாரமாய் நின்றிருந்த வைரம் பாய்ந்த தருக்களை வால் நீண்ட எந்திரத்தால் வேரோடு வெட்டி சாய்த்தனரே! மனிதன் இல்லாமல் நாடும் இல்லை மரங்கள் இல்லாமல் ஊரும் இல்லை இயற்கை இட்ட விதை இமயமாய் வளர்ந்திருக்க முகில் கூட்டம் மோதி மழையாய் மொழிந்துவிட மனித மூச்சுக்கு ஆதாரமான உயிர் காற்றை உமிழ்கிறாய்! ஒரே இடத்தில் நின்றிருந்தாலும் வான் தொட்டு வளர்ந்திருந்தாலும் மண் பெற்ற மரமெனும் மாதரசியை என்றென்றும் காத்திடுவோம்! - வடிவேல் முருகன், சென்னை. தொடர்புக்கு: 98401 58664


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !