நம்மிடமே இருக்கு மருந்து: இந்துப்பு!
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல், நம் உணவில் உப்பு நிச்சயம் இருக்கும். அதே சமயம், உப்பிற்கு மாற்றும் உப்பு தான். நம் உடலை பாதுகாக்க வேண்டுமென்றால், அயோடின் அதிகம் கலக்காத உப்பை பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக நாம், இந்துப்பை வாங்கி பயன்படுத்தலாம். இது, பெரும்பான்மையாக வெள்ளை நிறத்திலும், சிவப்பு மற்றும் ஊதா நிறத்திலும் காணப்படும். சித்தா மற்றும் ஆயுர்வேத முறையில் மருந்துகள் தயாரிக்கும் போது, இவை கூட்டுக்கலவையாக பயன்படுத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் அயோடின் கலக்காத சாதாரண உப்பை, நாம் பயன்படுத்த வாய்ப்புகள் இல்லை. ஆனால், அதற்கு மாற்றாக, இமாலயன் உப்பு எனப்படும், இந்துப்பை பயன்படுத்தலாம். உலகில் உள்ள மலைத்தொடர்கள் எல்லாம், கடினமான கருங்கல் பாறைகளால் ஆனவை. சில வகை மலைகள் மட்டும் விதிவிலக்காக, கடினமற்ற, உடையும் தன்மைமிக்கவையாக காணப்படுகின்றன. அவையே உப்புப்பாறைகள் என, அழைக்கப்படுகின்றன. அந்த உப்பு பாறைகளிலிருந்து கிடைப்பதே, பாறை உப்பு எனும் இந்துப்பாகும். மேலும், பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்படும் இந்துப்பு, சுத்தமான நீர் மற்றும் இளநீரில் ஊறவைத்து, பதப்படுத்தப்பட்ட பிறகே, பயன்பாட்டுக்கு வருகிறது. இந்துப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு மற்றும் அயோடின் போன்ற தாதுக்களுடன், சோடியம் குளோரைடும் அதிக அளவில் உள்ளது. மனிதருக்கு நலம் தரும், 80 வகையான கனிம தாதுக்கள் மற்றும் சத்துக்களை கொண்டுள்ளது. இந்துப்பின் பயன்பாடு அவற்றின் நன்மைகள் குறித்து, தமிழகத்தில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. ஆயினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், பழமை வாய்ந்த தமிழ் சித்த மருத்துவத்தில், முக்குற்றம் எனக்கூறும் வாதம், பித்தம் மற்றும் கபம் உள்ளிட்ட வியாதிகளை போக்கும் மருந்துகள் தயாரிப்பில், இந்துப்பும் சேர்க்கப்பட்டது. மேலும், இந்துப்பை தினமும் உணவில் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடலை வலுவாக்க உதவுகிறது. இது, எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது மற்றும் மனச்சோர்வை நீக்கும் தன்மையுடையது. தைராய்டு பிரச்னைக்கு சிறந்த மருந்து, இந்துப்பு. குளிக்கும் முன், இந்துப்பை உடலில் தேய்த்து சற்று நேரம் கழித்து குளித்து வர, உடல் அசதி நீங்கி, மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். மேலும், இந்துப்பை கொண்டு சமைத்த உணவை, வீட்டில் அனைவரும் தினம் சாப்பிட்டு வந்தால், வியாதிகள் அண்டாத நல்வாழ்வை நலமுடன் வாழலாம். இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரால் வாய் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் நீங்கும். பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான நோய்கள் விரைவில் குணமாகும். மூல நோய் மற்றும் வயிற்றுப் புண் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது.