நம்மிடமே இருக்கு மருந்து: முல்தானிமட்டி!
முல்தானிமட்டி என்பது, சருமத்தை அழகுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொருள். இது, சருமத்தை சுத்தப்படுத்தவும், உலர்ந்த செல்களை நீக்கவும் - 'ஸ்கிரப்பிங்' எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் உதவுகிறது. முல்தானிமட்டியில் உள்ள துத்த நாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் தன்மைக் கொண்டது. இதனுடன், தயிர், பன்னீர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து வீட்டிலேயே, 'பேஸ் பேக்'குகள் தயாரித்து பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், தோலின் நிறத்தையும், அழகையும் பாதுகாக்கலாம். முகத்தில் வரும் கரும்புள்ளி, வெண்புள்ளி போன்ற பிரச்னைகளுக்கு முல்தானிமட்டியுடன் வேப்ப இலையின் விழுதை கலந்து பூசி, காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும், வெண்புள்ளிகளும் நீங்கி, சருமம் பொலிவடையும். கோடைகாலத்தில் முல்தானிமட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் முல்தானிமட்டியுடன், துாய்மையான சந்தன துாளை கலந்து பூசினால், எரிச்சல் குறைந்து, குளிர்ச்சியாக இருக்கும். வெளியே செல்வதற்கு முன், முகத்தில் முல்தானிமட்டியை பூசி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரில் கழுவ முகம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கும். பூலான் கிழங்கு - 50 கிராம், கஸ்துாரி மஞ்சள் - 50 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், பயத்தம் பருப்பு - 100 கிராம், வெள்ளரி விதை - 100 கிராம், வெட்டிவேர் - 25 கிராம் ஆகியவற்றை பொடியாக அரைத்து வைத்து, தினமும் குளிக்கும் போது பயன்படுத்தலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குளியல் பவுடருடன், ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து, சருமம் பொலிவடையும். முகத்தில் பருக்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பு பிரச்னை உள்ளோர், பன்னீருடன், முல்தானிமட்டியை குழைத்து, சிறிய பிரஷால் முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், விரைவில் இப்பிரச்னை தீரும்.