உள்ளூர் செய்திகள்

சம்மர் ஸ்பெஷல்: கோடையை சமாளிக்க...

கோடை காலத்தில் வெளிப்புறத்தில் உயரும் வெப்ப நிலையால் நம் உடலில் நீரிழப்பு இல்லாமல் காக்க வேண்டியது அவசியம். உடல் சூட்டை சம நிலையில் வைத்திருக்க, தினசரி, இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது உதவும் என்கின்றனர், மருத்துவர்கள். உடல் சூட்டை தணிக்க தண்ணீர் குடிப்பது உதவுகிறது. எந்த வகையான காலநிலையாக இருந்தாலும் குறிப்பாக, வெயில் காலங்களில் அதிகம் தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.* தினசரி, இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தவிர்ப்பதுடன், ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும். இது, மயக்கம் வருதல், தலை சுற்றுதல் ஆகியவற்றையும் தடுக்கும்* குடல் இயக்கம் சிறப்பாக செயல்பட, அதிகம் தண்ணீர் குடிக்கலாம். உடலில் உள்ள, டாக்ஸின் கழிவுகளை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றுவதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். போதுமான தண்ணீரை குடிப்பது, சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது * நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, நீர் நிறைந்த பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தர்பூசணி, ஆரஞ்சு, தக்காளி சாலட் போன்றவைகள் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுப்பதுடன், நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும். உடல் வலிமையையும், ஊக்கத்தையும் வழங்கும்* அவ்வப்போது இளநீர் மற்றும் எலுமிச்சை சாறில் உப்பு மற்றும் புதினா கலந்து அருந்தலாம். ஒரு கப் வெள்ளரிக்காய் துண்டுகளை சாப்பிடலாம். சுரைக்காயை தயிரில் கலந்து சாப்பிடலாம். காலையில் நீராகாரம் அல்லது கஞ்சி சாப்பிடலாம் * நீங்கள், 'ஏசி' அறையில் இருந்து வெளியே கிளம்புவதாக இருந்தால், உடனே வெளியேறி விடாதீர்கள். வெப்ப நிலை மாற்றம் காரணமாக உடலில் நீரேற்றம் குறைந்து சோர்வு அதிகரிக்கும். இதை தவிர்க்க, 'ஏசி' அறையிலிருந்து கிளம்பும் முன், 10 நிமிடங்கள், 'ஏசி'யை நிறுத்திவிட்டு, அறை வெப்ப நிலையில் இருந்து பின், வெளியே வாருங்கள். மதுபானங்கள், காபின் நிறைந்த காபி போன்ற பானங்களை கோடை காலத்தில் அளவாக பயன்படுத்த வேண்டும். முடிந்தால் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கிரீன் டீ, லெமன் டீ குடிக்கலாம்* காலை அல்லது மாலையில், 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, கோடை காலத்தில் உங்களை சுறுசுறுப்பாக இருக்க உதவும்கோடை காலத்தில் சர்க்கரை, உப்பு, காரம் போன்றவற்றை சமையலில் அளவாக பயன்படுத்த வேண்டும். சிப்ஸ்களுக்கு பதில் உலர் பருப்பு வகைகளை சாப்பிடலாம்.தொகுப்பு: கோவீ.ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !