உள்ளூர் செய்திகள்

எது சரி... எது தவறு...!

நடக்கக் கூடாதவை -நடந்தால், தீமை தரக்கூடியவைகளை செய்ய முனைவோம். இது, மனித இயல்பு. தந்தைக்கு உண்டான பெரும் பிரச்னை; அதிலிருந்து அவரை காப்பாற்ற, மகள் செய்த செயலை பார்க்கலாம்; தைரியம் வரும்.புத்தர், ஊர் ஊராக போய், உபதேசம் செய்து, நல்வழி காட்டி வந்த காலம் அது. பெரும் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு, உத்பலா எனும் பெண் இருந்தாள்.துாய்மையான மனம் படைத்த, உத்பலா, அழகில் ஈடு இணை இல்லாதவள். அவளின் அழகு, ஊர் முழுதும் பேசப்பட்டது. 'உத்பலாவை நான் தான் திருமணம் செய்து கொள்வேன்...' என்று, பெரிய பெரிய பணக்காரர்கள், போட்டி போட்டனர். உத்பலாவை மணக்கும் போட்டியில், அரச குமாரர்கள் கூட இருந்தனர். 'அரச குமாரர்கள் உட்பட, பெரிய பெரிய மனிதர்களெல்லாம், உத்பலாவை மணக்கப் போட்டி போடுகின்றனரே... என்ன செய்வது? யாராவது ஒருவருக்குத்தானே, திருமணம் செய்து கொடுக்க முடியும்...'அப்படி, யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுத்தால், மற்றவர்கள், அவனை கொன்று விடலாம்... மகளுக்கும் ஆபத்து வரும்... என்ன செய்வது?' என்று நடுங்கினார், உத்பலாவின் தந்தை.மனக்கவலையை யாரிடமாவது சொன்னால், அது குறையுமல்லவா... உத்பலாவை அழைத்த தந்தை, அவளிடம், நிலைமையை விளக்கிக் கூறினார்.பொறுமையாகக் கேட்ட உத்பலா, 'அப்பா... ஏன் கவலை? என்ன செய்யலாம், சொல்லுங்கள்...' என, கேட்டாள்.சற்று நிதானித்த தந்தை, ஒருவழியாக தன் மனதில் இருந்ததை வெளிப்படுத்தினார்...'அம்மா... உன்னிடம் இதைச் சொல்லவே, தயக்கமாக இருக்கிறது. இருந்தாலும், வேறு வழியில்லை...' என்று இழுத்தார்.'என்ன அப்பா இது... தயக்கம் வேண்டாம்; சொல்லுங்கள்... நீங்கள் என்ன சொன்னாலும், செய்கிறேன்...' என்றாள், உத்பலா. மனதைக் கட்டுப்படுத்தியவர், 'மகளே... திருமணமே செய்து கொள்ளாமல், நீ பவுத்தத் துறவியாக மாறுவது தான், இந்தப் பிரச்னையில் இருந்து, தப்பிப் பிழைக்க ஒரே வழி... நீ என்ன சொல்கிறாய்?' எனக் கேட்டார். கைகளைக் கொட்டி, மனதில் இருந்த மகிழ்ச்சியை, அப்படியே முகத்தில் வெளிப்படுத்தினாள், உத்பலா.'அப்பா... இதைச் சொல்லவா இந்த பாடு பட்டீர்கள்... நீங்கள் எதைச் சொன்னாலும், அது என் நல்லதுக்காக தான் என்பது, எனக்கு தெரியாதா... நீங்கள் சொன்னபடி, பவுத்தத் துறவி ஆகிறேன்...' என்றவள், மறுநாளே, துறவு பூண்டாள். அவள் அழகுக்காக, அவளை மணக்க முயன்றோர் உட்பட அனைவரும், அவள் திருவடிகளில் விழுந்து வணங்கினர். புத்தர் காலத்தில் மட்டுமல்ல, குடும்ப நன்மைக்காக, தங்களையே தியாகம் செய்த, உத்பலா போன்ற பல பெண்கள், இன்றும் நம் தமிழகத்தில் நிறைய பேர் உள்ளனர். அவர்களின் தியாகத்தை மதிக்கிறோமோ இல்லையோ... அப்படிப்பட்ட, உத்பலாக்களை அவமானப்படுத்தாமல் இருந்தாலே போதும்!பி.என்.பரசுராமன்ஆலய அதிசயங்கள்!கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம், ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியங்களுக்கும், உப்பு சேர்ப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !