வழக்கு அடிப்படையில் ராஜினாமா: பாதி அமைச்சர்கள் பதவி காலியாகும்
பாகல்கோட்: ''வழக்கு உள்ளது என்ற அடிப்படையில் ராஜினாமா செய்தால், நாட்டில் பாதி அமைச்சர்கள் பதவி காலியாகும்,'' என, பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியுள்ளார். பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்த வாரம் முழுதும் சட்டசபையை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள், சட்டசபையின் உள்ளே, வெளியே போராட்டம் நடத்தினர். அவர்கள் போராடுகின்றனர் என்பதற்காக நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா? எதிர்க்கட்சியினரிடம் ஆவணம் இருந்தால், சட்டசபையில் வெளியிட வேண்டும். சபாநாயகரின் அனுமதி பெற்று போராடட்டும். வழக்கு உள்ளது என்ற அடிப்படையில், மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால், நாட்டில் பாதி அமைச்சர்கள் பதவி காலியாகும். அனைவரும் மீதும் குற்றச்சாட்டு இருக்கும் போது, நாகேந்திராவை மட்டும் குறிவைப்பதில் என்ன நியாயம்? 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிந்ததால், அதற்கு தார்மிக பொறுப்பேற்று, தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய சொல்லி கேட்டோம். பலரது நெருக்கடிக்கு பிறகே அவர், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நாகேந்திராவை குற்றமற்றவர் என்று, லோக் ஆயுக்தா அறிக்கை வழங்கியுள்ளது. இதனால் அவர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்பது தான், எங்கள் கட்சியின் தெளிவான நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.