ஆவணப்படத்தை திரையிட ஏ.பி.வி.பி., கடும் எதிர்ப்பு
பெங்களூரு: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டில்லியில் கலவரத்தை துாண்டியதற்காக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித்தின் ஆவணப்படம், பெங்களூரில் உள்ள தேசிய சட்ட கல்லுாரியில் திரையிடப்பட உள்ளது. இதற்கு, ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரின் தேசிய சட்ட கல்லுாரியில், உமர் காலித் குறித்த ஆவணப்படம், 'கைதி எண் 626710' எனும் தலைப்பில் இன்று திரையிடப்பட உள்ளது. இதை தொடர்ந்து விவாதமும் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேச விரோத செயல்பாடுகளில் ஈடுபட்ட நபர்கள் குறித்து ஆவணப்படம் கல்வி வளாகங்களில் திரையிடப்படக்கூடாது. கல்வி வளாகங்களை அரசியல் பிரசாரத்திற்காக பயன்படுத்தக்கூடாது. இது குறித்து, கல்லுாரி நிர்வாகத்திடம் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், எவ்வித பதிலும் நிர்வாகம் தரப்பிலிருந்து வரவில்லை. படத்தை திரையிட வழங்கப்பட்ட அனுமதியை நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாணவர்களிடம் தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கக்கூடாது. மாறாக, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.