உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / ஆர்.பி.ஐ., நடவடிக்கை கடுமையானது ஐ.ஐ.எப்.எல்., நிர்வாக இயக்குனர்

ஆர்.பி.ஐ., நடவடிக்கை கடுமையானது ஐ.ஐ.எப்.எல்., நிர்வாக இயக்குனர்

புதுடில்லி:'ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ்' நிறுவனம், தங்க கடன்கள் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள நிலையில் இதற்கு நிர்வாக பிரச்னை எதுவும் காரணம் இல்லை என்று, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிர்மல் ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை கொஞ்சம் கடுமையானது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்திய போது, நிறுவனத்தின் தங்க கடன் பிரிவில், சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக கூறி, தங்க கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்தது.இந்நிலையில், இது தொடர்பாக சிறப்பு தணிக்கை நடைபெற்று வருவதாகவும்; தணிக்கை முடிவடைந்த பின்னர், கட்டுப்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் நிர்மல் ஜெயின் தெரிவித்துள்ளதாவது:ரிசர்வ் வங்கியின் உத்தரவு கொஞ்சம் கடுமையானதாகத் தோன்றுகிறது. எனினும், இது நிறுவனத்தின் நிர்வாகம் சார்ந்த பிரச்னையோ அல்லது நெறிமுறை பிரச்னையோ இல்லை. நிறுவனத்தின் செயல்பாடுகளில் உள்ள சில பிரச்னைகள் காரணமாகவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கியுடன் கடந்த 45 நாட்களாக நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம்.தங்க சோதனையை பொறுத்தவரை, எங்கள் கிளைகளின் மதிப்பீட்டுக்கும், தணிக்கை குழு மதிப்பீட்டுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். எனினும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு பின், தற்போது திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

முன்னணி நிறுவனம்

தங்க கடன் வணிகத்தில் ஈடுபட்டு வரும் நாட்டின் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பட்டியலில், ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், இந்நிறுவனம் மொத்தம் 77,444 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. இதில், 32 சதவீதம் அதாவது 24,692 கோடி ரூபாய் தங்க கடனாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை