உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி /  வட்டியை குறைத்தது ரிசர்வ் வங்கி : வீடு, வாகன கடன் இ.எம்.ஐ., பாரமும் குறைகிறது

 வட்டியை குறைத்தது ரிசர்வ் வங்கி : வீடு, வாகன கடன் இ.எம்.ஐ., பாரமும் குறைகிறது

மும்பை: மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.50 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் குறைத்து, 5.25 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு குறைக்கப்படும்பட்சத்தில், கடன் வாங்கியுள்ளவர்கள் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ., தொகையும் குறையும். முக்கிய முடிவுகள் * ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 5.25 சதவீதம் ஆனது * நடப்பாண்டில் மட்டும் ரெப்போ வட்டி 1.25 சதவீதம் குறைப்பு * நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பு 6.80 சதவீதத்தில் இருந்து 7.30 சதவீதமாக உயர்வு * பணவீக்க கணிப்பு 2.60 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைப்பு * வங்கிகளிடமிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கடன் பத்திரங்களை வாங்க முடிவு * கடந்த நவம்பர் 28ம் தேதி நிலவரப்படி அன்னிய செலாவணி கையிருப்பு 61.76 லட்சம் கோடி ரூபாய் * அடுத்த பணக் கொள்கை குழு கூட்டம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4 - 6ம் தேதி வரை நடைபெறும். வீட்டுக்கடன்... ரெ ப்போ வட்டி குறைப்பைத் தொடர்ந்து, வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் குறைய உள்ளது. வங்கிகள் இந்த பலனை கடன் வாங்கியவர்களுக்கு முழுதுமாக வழங்கும்பட்சத்தில், வாடிக்கையாளர்கள் இ.எம்.ஐ.,யில் கணிசமான தொகையை சேமிக்க முடியும். இதனிடையே, ரெப்போ தொடர்புடைய அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதத்தை உடனடியாக 0.25 சதவீதம் குறைத்து, 8.15 சதவீதத்தில் இருந்து 7.90 சதவீதமாக பேங்க் ஆப் பரோடா அறிவித்துள்ளது. ரூபாய் மதிப்பு அ மெரி க்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என, இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. கரன்சி சந்தைகளே மதிப்பை தீர்மானிக்கும்; அதிக ஏற்ற இறக்கங்களின் போது மட்டும் தான் ரிசர்வ் வங்கி தலையிடும். பணவீக்கம் பணவீக்கம் குறைவாக இருக்கும் வரை, ரெப்போ வட்டி விகிதமும் குறைவாகவே இருக்கும். எனினும் அதிகபட்சமாக எவ்வளவு வரை வட்டி விகிதம் குறைக்கப்படும் என ஊகிக்க இயலாது. சில்லரை விலை பணவீக்கம் மிகவும் குறைந்துள்ள நிலையில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரத்துக்கு இது சரியானதல்ல. நான்கு சதவீத பணவீக்கமே ஆரோக்கியமானது. டாலர் ஸ்வாப் வங்கிகளிடமிருந்து, 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக இந்திய ரூபாயாக வழங்க முடிவு. மூன்று ஆண்டுகளுக்கு பின் இவை திரும்ப பெறப்படும். வங்கிகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டிபாசிட் வட்டி ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ள நிலையில், வங்கிகள் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை மேலும் குறைக்கக்கூடும். எனவே, கூடுதல் வட்டி பெற விரும்புபவர்கள் விரைவாக டிபாசிட் செய்வது நல்லது என்பது, வங்கித்துறை நிபுணர்கள் கருத்து. நீண்டகால டிபாசிட் திட்டங்களை தேர்வு செய்வது நல்லது என அவர்கள் தெரிவித்தனர். சிறப்பு முகாம் வங்கி குறைதீர்ப்பாளரிடம் ஒரு மாதத்துக்கும் மேலாக நிலுவையில் உள்ள புகார்களை விரைவாக தீர்ப்பதற்காக, அடுத்த மாதம் முதல் இரண்டு மாத கால சிறப்பு முகாம் நடத்த திட்டம். வங்கி தொடர்பான புகாரை வங்கிக்கு அளித்து, 30 நாட்களுக்குள் பதில் வரவில்லை என்றாலோ, தீர்வு திருப்தியாக இல்லை என்றாலோ, இத்திட்டத்தில் இலவசமாக தீர்வு பெறலாம் என்கிறது ரிசர்வ் வங்கி. கூடுதல் வசதி அடிப்படை சேமிப்பு கணக்குகள் எனப்படும் 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், வழக்கமான சேமிப்பு கணக்குகளுக்கு இணையான வசதிகள் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இலவச டிபாசிட், இலவச ஏ.டி.எம்., கார்டு, செக் புக், பாஸ் புக், டிஜிட்டல் வங்கி சேவை, மாதத்துக்கு நான்கு முறை இலவசமாக பணம் எடுக்கும் வசதி ஆகியவற்றை இவ்வாடிக்கையாளர்களும் பெறலாம். பொருளாதாரத்துக்கு சிறப்பான காலம் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் பணவீக்கம் 2.20 சதவீதமாகவும், பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகவும் உள்ளது. வழக்கமாக, வளர்ச்சி அதிகமாக இருந்தால் விலைவாசி உயர்வும் அதிகமாகவே இருக்கும். இவை இரண்டும் சாதகமாக அமைவது மிகவும் அரிது. கடந்த ஆறு மாதங்களில் இதுவே நடைபெற்றுள்ளது. பொருளாதாரத்துக்கு சிறப்பான காலமாக இது அமைந்துள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதால், தொடர்ந்து வளர்ச்சிக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. - சஞ்சய் மல்ஹோத்ரா, கவர்னர், ரிசர்வ் வங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை