பெங்களூரு: நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் அடுத்தடுத்து நிரம்பின. இரு அணைகளுக்கும், கர்நாடக அரசு சார்பில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் 'சீர்வரிசை சமர்ப்பணம்' செய்தனர்.காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கபிலா, காவிரி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் இறங்க வேண்டாம் என்று ஆற்றங்கரையோர மக்களுக்கு நீர்ப்பாசன துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தொடர் மழையால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 68,845 கனஅடி நீர்
மைசூரில் உள்ள கபினி அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டி.எம்.சி., நேற்றைய நிலவரப்படி, வினாடிக்கு, 20,346 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து, வினாடிக்கு 11,833 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், 18.75 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.இதுபோன்று, மாண்டியாவில் கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த கொள்ளளவு 49.45 டி.எம்.சி., ஆகும். நேற்றைய நிலவரப்படி, அணைக்கு, வினாடிக்கு, 57,012 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து, வினாடிக்கு 33,462 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே அணையில் 49.45 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.இரண்டு அணைகளில் இருந்தும், வினாடிக்கு 68,845 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில், கபினி அணை நீர் முழுதும் தமிழகத்துக்குச் செல்கிறது. கே.ஆர்.எஸ்., அணை நீரில், சற்று கர்நாடக கால்வாய்களுக்கும், மீதி தமிழகத்துக்கும் செல்கிறது. மங்கள பொருட்கள்
இரண்டு அணைகளும் நிரம்பிவிட்டன. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.அணைகள் நிரம்பும்போது, கர்நாடக அரசு சார்பில், மங்கள பொருட்களுடன் சீர்வரிசை சமர்ப்பிப்பது வழக்கம். மன்னர் காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.அந்த வகையில், கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய இரண்டு அணைகளுக்கும், கர்நாடக அரசு சார்பில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர், முறங்களில் மங்கள பொருட்களுடன் நேற்று சீர்வரிசை சமர்ப்பணம் செய்தனர்.கே.ஆர்.எஸ்., அணை பகுதியில், நிறுவப்பட்டுள்ள நால்வடி கிருஷ்ணராஜா உடையார் மன்னரின் சிலையை இருவரும் திறந்து வைத்தனர்.
ஆசிர்வாதம்
துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:ஜூலையில் தினமும் 1 டி.எம்.சி., நீர் மட்டுமே தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். இம்முறை இதுவரை 40 டி.எம்.சி., திறந்துவிடப்பட்டுள்ளது.இம்முறை நல்ல மழை பெய்திருப்பதால், நடப்பாண்டில் 84 டி.எம்.சி., நீர் தமிழகத்துக்குச் சென்றுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளும் இதுபோல் நல்ல மழை பெய்து, சீர் வரிசை சமர்ப்பணம் செய்ய காவிரி தாய் ஆசிர்வதிப்பார்.காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின்றி தவித்தபோது, தமிழகத்துக்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு வந்ததால் கபினி அணையில் திறந்துவிடப்பட்டது.கடந்தாண்டு கபினியில் தண்ணீர் இல்லை. இம்முறை நிரம்பி வழிகிறது. கஷ்ட காலத்தில் எங்களை காப்பாற்றிய கபிலா ஆற்றுக்கு அரசின் கோடிக்கணக்கான நன்றிகள்.இவ்வாறு அவர் பேசினார்.
'மேகதாது அணை கட்டுவது உரிமை'
கே.ஆர்.எஸ்., அணைக்கு பூஜை செய்த பின் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சாதாரண மழை ஆண்டில், அணைகள் நிரம்பும்பட்சத்தில், ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி., நீர் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். ஆனால், 2022 - 23ல், 665 டி.எம்.சி., நீர் திறந்து விடப்பட்டுள்ளன.இந்தாண்டு, இதுவரை 83 டி.எம்.சி., நீர் திறந்து விடப்பட்டுள்ளன. இன்னும் அதிகமாக திறந்து விடப்படும். ஆனால், கஷ்ட காலத்தில் குறிப்பிட்ட நீர் திறந்துவிட முடியாது.கடலில் கலக்கும் கூடுதல் நீரை சேமித்து வைப்பதற்காகவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம். அணை கட்டுவது எங்கள் உரிமை. கட்டியே தீருவோம்.இதனால், கர்நாடகாவை விட தமிழகத்துக்கு தான் அதிக பயன் உள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி தரவில்லை. மாண்டியா எம்.பி., (குமாரசாமி) அனுமதி பெற்றுத் தந்தால், 65 டி.எம்.சி., நீரை சேமித்து வைக்கலாம். மின்சாரம் உற்பத்தி செய்யவும் பயன்படும். பெங்களூரு குடிநீருக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால், அணை கட்டுவதற்கு அரசியல் லாபத்துக்காக தமிழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதுகுறித்து கர்நாடக எம்.பி.,க்கள் பார்லிமென்டில் ஒரு நாளும் பேசவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.