உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரம்பு மீற வேண்டாம்: கேரளாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

வரம்பு மீற வேண்டாம்: கேரளாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'அரசியலமைப்பு அதிகார வரம்புகளுக்கு மீறிய விஷயங்களில் மாநில அரசுகள் தலையிடக் கூடாது' என, வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

சர்ச்சை

சமீபத்தில் வெளிநாட்டு ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்களுக்கு செயலராக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி வாசுகியை கேரள அரசு நியமித்தது.வெளியுறவு விவகாரங்கள் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டுள்ள சூழலில், மாநில அரசின் இந்த நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின், 1ம் எண் பட்டியலில் உள்ள குறிப்பின்படி, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டுடனான எந்த தொடர்பு குறித்த விஷயங்களை கையாளுவதற்கு, மத்திய அரசுக்கு மட்டுமே முழு உரிமை உள்ளது. இது, மாநிலங்கள் கையாள வேண்டிய விஷயமல்ல. எனவே, அரசியலமைப்பு அதிகார வரம்புக்கு மீறிய விஷயங்களில் மாநில அரசுகள் தலையிடக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு.

மிரட்டல்

வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள சமூக விரோத சக்திகள், நம் நாட்டு தலைவர்கள், துாதரக அதிகாரிகள், இந்திய நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்கள் மீது, அந்நாட்டு அரசு வலுவான நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறோம். நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிராக நடந்த போராட்டம் காரணமாக, அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை, 6,700 மாணவர்கள் தாயகம் திரும்பிஉள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
ஜூலை 26, 2024 14:34

அடுத்து கேரள அரசு துபாய் நாட்டுக்கு வெளியுறவு அமைச்சரை நியமிக்குமோ?


GMM
ஜூலை 26, 2024 09:30

Indian administrative service யை international administrative service என்று எண்ணிவிட்டதா கேரளா கம்யூனிஸ்ட். தெரு கூட்ட உத்தரவு போட்டால் IAS செய்வார்களா? முதலில் பணி ஒழுங்கு தெரியாத IAS டிஸ்மிஸ் செய்ய வேண்டும். 24 மணி நேரத்தில் ஒழுங்கு படுத்த தவறும் தலைமை செயலாளர் யை கவர்னர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் வரம்பு மீறல் தொடரும். முதன்மை காரணம் நீதிமன்ற, வழக்கறிஞர்கள் எல்லை மீறி செயல்படுவது. இதனை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ