திருவனந்தபுரம், ''வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்,'' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30ல் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டது.நிலச்சரிவில் சிக்கி, 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, மாநில முதல்வர் பினராயி விஜயன் நிவாரண உதவிகளை நேற்று அறிவித்தார்.இது குறித்து, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 231 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை தவிர, 206 உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுஉள்ளன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்படுகிறது. இதில், 4 லட்சம் ரூபாய், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும்; மீதமுள்ள 2 லட்சம் ரூபாய், முதல்வர் பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும் வழங்கப்படும். நிலச்சரிவில் கண்களை இழந்தவர்கள், கை, கால்களை இழந்தவர்கள் உட்பட 60 சதவீதம் வரை உடல் ஊனம் ஏற்பட்டவர்களுக்கு 75,000 ரூபாயும், அதற்கு குறைவான உடல் ஊனம் ஏற்பட்டவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது உறவினர்களுடன் வசிப்பவர்களுக்கு மாதந்தோறும் வீட்டு வாடகையாக தலா 6,000 ரூபாய் வழங்கப்படும்.நிலச்சரிவில் மீட்கப்பட்ட 401 சடலங்கள், உடல் உறுப்புகளின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன, இவற்றில் 121 பேர் ஆண்கள், 127 பேர் பெண்கள் என கண்டறியப்பட்டன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மேப்பாடி பஞ்சாயத்தில், மூத்த விஞ்ஞானி ஜான் மத்தாய் தலைமையில் ஐந்து பேர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.அவர்கள், நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி? நிலச்சரிவின் போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்வர்.இவ்வாறு அவர் கூறினார்.