| ADDED : டிச 03, 2025 07:49 AM
தியோரியா: உத்தர பிரதேசத்தில், திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு சென்ற மணமகள் அடுத்த, 20 நிமிடங்களுக்குள் கணவரை விட்டு பிரிவதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், முதலிரவு நடக்கும் சமயத்தில் விவாகரத்து ஆவணத்தில் மணமகன் கையெழுத்திட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. உ.பி.,யின் தியோரியா பகுதியை சேர்ந்தவர் விஷால் மாதேசியா. தந்தை நடத்தும் மளிகை கடையில் அவருக்கு உதவியாக இருந்து வருகிறார். விஷாலுக்கும், சலேம்பூரை சேர்ந்த பூஜாவுக்கும் சமீபத்தில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. கடந்த மாதம், 25ம் தேதி மாலை பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டை அடைந்த நிலையில், அன்று இரவே திருமணத்திற்கான அனைத்து சடங்குகளும் முடிந்தன. அதன் பின் மறுநாள் காலையில் முகூர்த்தம் முடிந்த நிலையில், மணப்பெண் தன் உறவினர்களுடன் மாமியார் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருந்தன. ஓய்வுக்காக புதுமண ஜோடியை ஒரு அறைக்குள் தங்கவைத்தனர். அப்போது மாப்பிள்ளை விஷாலுடன் மகிழ்ச்சியாக அந்த அறைக்குள் நுழைந்த பூஜா, அடுத்த 20 நிமிடங்களிலேயே வாடிய முகத்துடன் வெளியே ஓடி வந்தார். கணவர் விஷாலுடன் இனி ஒரு நிமிடம் கூட வாழ விரும்பவில்லை என கணீர் குரலில் தெரிவித்தார். முதலில், அவர் ஏதோ நகைச்சுவைக்காக அப்படி பேசுகிறார் என அங்கிருந்தவர்கள் நினைத்தனர். அதன் பிறகே, அது உண்மை என தெரிந்ததும் குழப்பம் அடைந்தனர். கணவரை விட்டு பிரிய என்ன காரணம் என பூஜாவிடம் கேட்க, அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. மாறாக, 'என் பெற்றோரை அழையுங்கள். நான் இங்கு வாழ விரும்பவில்லை' என தீர்க்கமாக சொன்னார். தகவல் அறிந்து அங்கு வந்த பூஜாவின் பெற்றோரும், சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், எதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து இந்த பிரச்னை உள்ளூர் பஞ்சாயத்தாரிடம் சென்றது. அவர்களும் மணப் பெண் பூஜாவின் மனதை மாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்தனர். ஆனால், எடுத்த முடிவில் அவர் உறுதியாக இருந்ததால், வேறு வழியில்லாமல், புதுமண ஜோடியை பிரித்து வைக்கும் முடிவுக்கு வந்தனர். அதன் அடிப்படையில், பரஸ்பர ஒப்புதலுடன் இருவரும் விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.