| ADDED : ஜன 22, 2024 11:25 PM
ராஞ்சி: ஜார்க்கண்டில், நில மோசடி மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் மீண்டும் விசாரணைக்கு வருமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.ஜார்க்கண்ட், முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். இவர் மீது நில மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.இவருடன் மாநில சமூக நலத் துறை இயக்குனரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சாவி ரஞ்சன் உட்பட 14 பேர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, ஏழு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. ஜன., 16 - 20ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என, இறுதியாக தெரிவித்து இருந்தனர்.இதை ஏற்றுக் கொண்ட அவர், ராஞ்சியில் உள்ள தன் வீட்டிலேயே விசாரணை நடத்தும்படி அமலாக்கத் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இதையடுத்து தலைநகர் ராஞ்சியில் உள்ள முதல்வர் ஹேமந்த் சோரனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏழு மணி நேர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.இந்நிலையில் வரும் 27-ம் தேதி மண்டல அலுவலகத்திற்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த விசாரணைக்கு பின், முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.