| ADDED : ஜூலை 13, 2011 12:49 AM
கவுகாத்தி:''அசாம் மாநிலத்தில், சந்தேகப்படும்படியாக, முறையான குடியுரிமை இல்லாமல், 1 லட்சத்து, 57 ஆயிரத்து, 465 பேர் உள்ளனர்'' என, முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.அவர் கூறியதாவது:சந்தேகத்துக்கிடமான நபர்களின் குடியுரிமை மீது விசாரணை நடக்கிறது. முதற்கட்ட விசாரணையில், இவர்களில், 5,577 பேர் வெளிநாட்டவர்கள் என்பதும், இவர்களிடம் இந்திய குடியுரிமை இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த நபர்களை அசாமில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.குடியுரிமை பற்றிய விசாரணையில், உண்மையான இந்திய குடியுரிமை பெற்றுள்ளவர்களும் பாதிக்கப்படுவதாக, சில தனியார் அமைப்புகள் புகார் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை பெற்றுள்ள நபர்களை தொந்தரவு செய்யும் வகையில், விசாரணை அதிகாரிகள் நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இது போன்ற நடவடிக்கைகளில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு எதுவும் வழங்குவதற்கு சட்டத்தில் இடம் இல்லை.இவ்வாறு தருண் கோகாய் கூறினார்.