உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கன்வார் யாத்ரீகர் குறித்து அவதுாறு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

கன்வார் யாத்ரீகர் குறித்து அவதுாறு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

மீரட்:''கன்வார் யாத்ரீகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவதுாறாக பதிவிட்டு வருகின்றனர்,'' என, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் கங்கை நதியில் இருந்து புனித நீர் சேகரித்து திரும்பிய கன்வார் யாத்ரீகர்களை, மீரட் மற்றும் காஜியாபாத் நகரில் மலர் துாவி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:மக்களின் கடவுள் பக்தியையும் நம்பிக்கையையும் சிலர் அவதுாறு செய்கின்றனர். கன்வார் யாத்ரீகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதுாறாக சிலர் பதிவிட்டுள்ளனர். மேலும், கன்வார் யாத்ரீகர்கள் கலவரம் செய்வது, ஹோட்டல்களை சூறையாடுவது, வாகனங்களை சேதப்படுத்துவது மற்றும் பொதுமக்களை அடிப்பது போன்ற போலி வீடியோக்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர். கன்வார் யாத்ரீகர் என்ற பெயரில் சில விஷமிகள் காவி உடை அணிந்து இதுபோன்ற செயல்களை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி யாத்ரீகர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். கன்வார் யாத்ரீகள் போலி நபர்களை விலக்கி வைக்கவும். அவர்களை உங்களுடன் இணைந்து யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்காதீர். போலிகளை கண்டுபிடித்தால் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கன்வார் யாத்திரை பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடக்க டில்லி - -டேராடூன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கங்கா கால்வாய் சாலையில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.கன்வார் யாத்திரை ஏற்பாடுகளை மேற்பார்வையிட வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், காஜியாபாத் துதேஷ்வர்நாத் கோவிலில் சிவலிங்கத்துக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்பின், வளாகத்தை ஆய்வு செய்த முதல்வர், கோவில் வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போலீஸ் மீது புகார்

மீரட் சார்தானா முகாமில் இருந்த பெண் யாத்ரீகர்களிடம், மூன்று போலீசார் அநாகரிகமாக நடந்து கொண்டதாக, போலீஸ் ஸ்டேஷன் முன் கன்வார் யாத்ரீகர்கள் போராட்டம் நடத்தினர்.சமரசப்படுத்திய போலீஸ் அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பின், 'யாத்ரீகர்கள் கூறுவது போல எந்தச் செயலும் நடக்கவில்லை. விசாரணை நடக்கிறது' என்றனர்.

3 யாத்ரீகர்கள் கைது

மிர்சாபூர் ரயில் நிலையத்தில், பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற வந்திருந்த துணை ராணுவப் படை வீரருக்கும், அதே ரயிலில் ஜார்க்கண்ட் மாநிலம் வைத்யநாத் கோவிலுக்கு செல்ல வந்திருந்த கன்வார் யாத்ரீகர்களுக்கும் இடையே டிக்கெட் எடுக்கும் இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.மூன்று யாத்ரீகர்கள் துணை ராணுவ வீரரை தாக்கியதாக கூறப்படுகிறது. ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, மூன்று யாத்ரீகர்களை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.

மூவர் உயிரிழப்பு

டில்லி - மீரட் சாலையில் காஜியாபாத் அருகே பத்ராபிராவில் நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு நான்கு கன்வார் யாத்ரீகர்கள் பைக் மற்றும் ஸ்கூட்டரில் சென்றனர். எதிரில் வந்த ஆம்புலன்சுடன் பைக் மற்றும் ஸ்கூட்டர் மோதியது. காயம் அடைந்த, ரிதிக்,23, அபினவ், 25, மற்றும் சச்சின், 38, ஆகிய மூன்று யாத்ரீகர்கள் துாக்கி வீசப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் மோனு கைது செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை