புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் ஆர்வம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்துவரும் புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மேலகோட்டை வீதி ராஜராஜேஸ்வரி மண்டபத்தில் அபிநயா புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த 14ம் தேதி துவங்கியது. இங்கு, பிரபல பதிப்பாளர்களின் புத்தகங்கள் கண்காட்சிக்காகவும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.வரலாறு, அறிவியல் நுால்கள், நாவல்கள், பொது அறிவு நுால்கள், போட்டி தேர்வு புத்தகங்கள் என, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் மேல் புத்தகங்கள் உள்ளன. தினமும் அதிக அளவில் மக்கள் குவிந்து வருகின்றனர்.புத்தக கண்காட்சியின் உரிமையாளர் சேத்தியாதோப்பு விஜயரங்கன் கூறுகையில், பொன்னியின் செல்வன் 5 பாகம் கொண்ட புத்தகத்தை மலிவு விலையில் வழங்கி வருகிறோம். அனுமதி இலவசம். அரசு விடுமுறை மற்றும் அனைத்து ஞாயிறுகிழமைகளிலும் கண்காட்சி மற்றும் விற்பனை உண்டு. 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வரும் அக்., 31ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது என்றார்.