விழுப்புரம் மாவட்டத்தில் யாருக்கு அதிகாரம் என்பதில் அமைச்சர்கள் பொன்முடிக்கும், செஞ்சி மஸ்தானுக்கும் இடையே நிலவி வந்த கோஷ்டி பூசல், லோக்சபா தேர்தல் முடிவில் எதிரொலித்ததால், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் பதவியிலிருந்து, அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மூத்த அமைச்சர்களுடன் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். பின், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் பதவியில் இருந்து, செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, டாக்டர் ப.சேகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், தி.மு.க.,வின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலராக இருந்த புகழேந்தி மறைந்ததால், அவர் வகித்த மாவட்ட பொறுப்பாளர் பதவி, பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துஉள்ளார்.இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்கு முன், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் ஓட்டு சதவீதம் குறையுமானால், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்து இருந்தார்.அதன் அடிப்படையில், விழுப்புரம் லோக்சபா தொகுதியில், சிறுபான்மையினர் சமுதாய ஓட்டுகளும், வன்னியர் சமுதாய ஓட்டுகளும் குறைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் யாருக்கு அதிகாரம் என்பதில் பொன்முடிக்கும், செஞ்சி மஸ்தானுக்கும் இடையே கோஷ்டி பூசல் நீடித்து வருவது கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. முடிந்த லோக்சபா தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிட கவுதமசிகாமணிக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால், பொன்முடி அதிருப்தியில் இருந்தார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் கவுதமசிகாமணி போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அத்தொகுதியில் வன்னியர் சமுதாயத்தினர் ஓட்டுகள் அதிகம் என்பதால், உடையார் சமுதாயத்தை சேர்ந்த கவுதமசிகாமணியை போட்டியிட வைக்க, கட்சி தலைமை விரும்பவில்லை.கடந்த 37 ஆண்டுகளாக தி.மு.க.,வில் இருந்து வரும் விவசாய, தொழிலாளர் அணி மாநில செயலர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து மாவட்ட செயலர் பொறுப்பு கவுதம சிகாமணிக்கு வழங்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற அடிப்படையில், செஞ்சி மஸ்தானை மாற்றிவிட்டு வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த டாக்டர் சேகருக்கு மாவட்ட செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -