கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகள் தமிழகத்தில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு எடுத்த, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையால், போலீசார் அதிருப்தி அடைந்து உள்ளனர். மாவட்டத்தை நிர்வகிக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை காப்பாற்றும் அரசு, மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பழிவாங்குவது சரியா என, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலிடம் போலீஸ் அதிகாரிகள் பலர் புலம்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தமிழக காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என, இரு தரப்பினருமே அரசுக்கு அச்சாணி போன்றவர்கள். எனவே, ஆளுங்கட்சியினர், இரு தரப்பினரையும் ஒன்றாகவே பாவிக்க வேண்டும். ஆனால், தி.மு.க., அரசில் நிலைமை வேறாக உள்ளது. எந்தப் பிரச்னையானாலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் காப்பாற்றப்படுவதும், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பழிவாங்கப்படுவதும் தொடர்கிறது. கடந்த ஆண்டு, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 25 பேர் வரை இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்படவில்லை. அதேநேரத்தில், விழுப்புரம் எஸ்.பி.,யாக இருந்த மஞ்சுநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்; செங்கல்பட்டு எஸ்.பி.,யாக பதவி வகித்த பிரதீப் இடமாற்றம் செய்யப்பட்டார்; அத்துடன், பிற போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டனர்.செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில், 25 பேர் இறந்ததற்கு, மெத்தனால் என்ற வேதிப்பொருளை அவர்கள் குடித்ததே காரணம். இதற்கும், சட்டம் -- ஒழுங்கிற்கும் தொடர்பு கிடையாது. மெத்தனால் குறித்து, எல்லா நிலைகளிலும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட வருவாய் நிர்வாகத்தை சார்ந்தது. அதாவது, கலெக்டர் தான் பொறுப்பு. ஆனால், கள்ளச்சாராய, விஷச்சாராய பலி என்றால், சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் போலீசார் மீது தான் நடவடிக்கை பாய்கிறது.தற்போது, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், மெத்தனால் அருந்தி, 60 பேர் வரை இறந்துள்ள விவகாரத்திலும், போலீஸ் அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை பாய்ந்துள்ளது, இது, போலீசார் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஐ.பி.எஸ்., அதிகாரியான சாய்சிங் மீனா, சமீபத்தில் தான் பதவி உயர்வில், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யானார். சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தான் அவருக்கு. ஆனால், மெத்தனால் அருந்தி பொதுமக்கள் இறந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இந்த தண்டனை, அவருடைய பணி முழுக்க கரும்புள்ளியாகவே தொடரும்.மெத்தனால் பங்கீடு மற்றும் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த கலெக்டர் ஷ்ரவண் குமார் ஜடாவத்தை இடமாற்றம் செய்துள்ளனர். நடந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பேற்க வேண்டியவரே அவர் தான். இந்த முறை, அரசு மீதான அழுத்தம் அதிகமானதும், மதுவிலக்கு அமலாக்கத்துறை ஏ.டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால்; எஸ்.பி., செந்தில் குமாரை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கு, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, ஊர்வலம் உள்ளிட்ட பொது நிகழ்வுகளை கண்காணிப்பது, தலைவர்கள் பாதுகாப்பு என, நாட்டில் எது நடந்தாலும், அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளது. பணியாட்கள் பற்றாக்குறையால், அவர்கள் அதை கவனிக்கவே நேரம் இல்லை. அதனால் தான், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உருவாக்கப்பட்டது. அவர்கள் சரியாக பணியாற்றவில்லை. கள்ளக்குறிச்சி மரணங்களுக்கு போலீஸ் தான் காரணம் என்றால், போலீஸ் துறையை நிர்வகிக்கும் உள்துறை செயலர் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அந்தப் பொறுப்பில் இருப்பவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அவர் மீது நடவடிக்கை எடுத்தால், ஐ.ஏ.எஸ்., லாபி, அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து விடும் என்பதால் கண்டு கொள்ளவில்லை.இதே நிலை தொடர்ந்தால், சட்டம் - ஒழுங்கு பிரிவில் ஆர்வமுடன் பணியாற்ற வரும் அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்து விடும்.இவ்வாறு காவல் துறை வட்டாரங்கள் கூறின- நமது நிருபர் -.