உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும் ஒன்று தான்: த.வெ.க.,வில் இணைந்த செங்கோட்டையன் சொல்கிறார்

 தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும் ஒன்று தான்: த.வெ.க.,வில் இணைந்த செங்கோட்டையன் சொல்கிறார்

சென்னை: விஜய் முன்னிலையில் த.வெ.க.,வில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று இணைந்தார். அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட இரண்டு பதவிகள் வழங்கப்பட்டன. அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று முன்தினம் தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் தலைவரான விஜயை, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். 50 ஆண்டுகள் இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் எம்.பி., சத்யபாமா உள்ளிட்ட தன் ஆதரவாளர்களுடன் நேற்று காலை செங்கோட்டையன் வந்தார். பின்னர், ஆதரவாளர் களுடன் விஜய் முன்னிலையில், த.வெ.க.,வில் முறைப்படி சேர்ந்தார். அவருக்கு சால்வை மற்றும் த.வெ.க., கட்சித் துண்டு அணிவித்து விஜய் வரவேற்றார். மேலும், த.வெ.க.,வில், செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான அமைப்பு செயலர் பொறுப்பும் வழங்கப்பட்டு உள்ளன.

பின், செங்கோட்டையன் அளித்த பேட்டி:

கடந்த 1972ல் அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியபோது, பின்னால் அணிவகுத்த தொண்டர்களில் நானும் ஒருவன். ஆனால், இன்றைய நிலை வேறு. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என வலியுறுத்தினேன்; கெடு விதிக்கவில்லை; பேச்சை துவக்க வேண்டும் என்றேன். கெடு என சொல்ல வைத்தது பழனிசாமி. கட்சியில் இருந்து என்னை வெளியேற்ற முடிவு செய்து, சரியாக காய் நகர்த்தினார். கட்சிக்காக 50 ஆண்டுகளாக உழைத்ததற்கு கிடைத்த பரிசு. மகேஷ் என்பவரின் மாமா, விபத்தில் இறந்து விட்டார். அவர் வீட்டிற்கு சென்று நான் துக்கம் விசாரித்ததற்காக, அவரையும் நீக்கினார். இது, தற்போதுவரை தமிழகத்தில் நடக்காத நிகழ்வு. அதன்பின், தெளிவான முடிவு எடுத்து, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்துள்ளேன். இன்று, அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டு கட்சிகளும் வேறல்ல; இரண்டுமே ஒன்று தான்; ஒன்றாக இணைந்து பயணம் செய்கின்றன. ஒரே ஒரு கருத்து மட்டும் சொல்கிறேன். நான் தான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் பார்த்துக் கொள்வான்; தண்டித்து விடுவான். எல்லாருக்கும் மேலே இருக்கும் இறைவன் நம்மை கண்காணித்து கொண்டு இருக்கிறான். துாய்மையான ஆட்சி தமிழகத்தில் மலர, விஜய் கட்சியை துவக்கி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். குழந்தைகள் கூட, அவருக்கு ஓட்டளிக்கும்படி பெற்றோரை கேட்கும் நிலை உள்ளது. ஜெயலலிதா படம் எல்லா நாடுகளிலும், மாநிலங்களிலும், மாற்றங்கள் உருவாகின்றன. டில்லியில் இரு பெரிய கட்சிகளுக்கு மத்தியில், ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. பஞ்சாபிலும் புதிய கட்சி ஆட்சிக்கு வந்தது. தமிழகத்திலும் புதிய கட்சி ஆட்சிக்கு வரும். த.வெ.க., தலைவர் விஜய் வெற்றி பெறுவார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புனிதமான ஆட்சியை வழங்கினர். ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு வேறு; அவர் துாய்மையானவர். ஒரு அரசு நினைத்தால், எப்படி வேண்டுமானாலும் வழக்கை ஜோடிக்க முடியும். தி.மு.க.,வோ, தேசிய கட்சிகளோ, என்னை சந்திக்கவில்லை; அமைச்சர் சேகர்பாபு என்னை சந்திக்கவில்லை. என் சட்டை பையில் வழக்கமாக வைத்திருக்கும் ஜெயலலிதா படத்தை மாற்றினால், ஒரே நாளில் மாற்றி விட்டார் என்பீர்கள். ஆனால், யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், த.வெ.க., ஒரு ஜனநாயகக் கட்சி. இவ்வாறு அவர் கூறினார். த.வெ.க.,வில் இணைந்த பின், முன் னாள் முதல்வர்கள் அண்ணா துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார். பவுன்சர்களுக்கு எச்சரிக்கை செங்கோட்டையனை த.வெ.க.,வினர் வரவேற்கும்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், தனியார் தொலைக்காட்சி கேமராமேன் ஒருவரை, விஜய் பாதுகாவலர்கள் தாக்கினர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. த.வெ.க., மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தலையிட்டு, அங்கிருந்த அனைத்து கேமராமேன்களிடமும் மன்னிப்பு கேட்டார். மேலும், 'இப்படியா நடந்து கொள்வது' என பாதுகாவலர்களை எச்சரித்தார். பின், காயமடைந்த கேமராமேனை, அங்குள்ள அறைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவரது அரசியல் அனுபவம் எனக்கு உறுதுணை: விஜய் செங்கோட்டையனை வரவேற்று, த.வெ.க., தலைவர் விஜய் கூறியதாவது: செங்கோட்டையன் 20 வயது இளைஞராக இருந்தபோதே, எம்.ஜி.ஆரை நம்பி, அவரது மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சின்ன வயதில், எம்.எல்.ஏ., என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன்பின், தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி, 50 ஆண்டுகளாக ஒரே கட்சியில் இருந்த செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்துள்ளார். அவரது அரசியல் அனுபவம், களப்பணி ஆகியவை த.வெ.க.,வுக்கு உறுதுணையாக இருக்கும். அவருடன் த.வெ.க.,வில் கைகோர்க்கும் அனைவரையும் வரவேற்கிறேன். நல்லதே நடக்கும்; நல்லது மட்டும்தான் நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை