உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  மாநாட்டு விளம்பரங்களில் கனிமொழி பெயர் படம் தவிர்ப்பு: ஆதரவாளர்கள் அதிருப்தி

 மாநாட்டு விளம்பரங்களில் கனிமொழி பெயர் படம் தவிர்ப்பு: ஆதரவாளர்கள் அதிருப்தி

தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டிற்கு தலைமை வகித்த கட்சியின் துணைப் பொதுச்செயலர் கனிமொழியின் படம் மற்றும் பெயர், மாநாட்டு விளம்பரங்களில் தவிர்க்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கடந்த 29ம் தேதி நடந்தது. பெண்களின் அரசியல் பங்கேற்பையும், சமூக முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பையும் வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி தலைமை வகித்தார். முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில், 13 மாவட்டங்கள் மற்றும் 39 சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த 1.15 லட்சம் மகளிர் பங்கேற்றதாக தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய உளவுத்துறை போலீசார் தரப்பில், 60,000க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்றதாக தெரிவித்துள்ளனர். தி.மு.க.,வில் கனிமொழிக்கு முக்கியத்துவம் தருவதற்காக, மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டின் சுவர் விளம்பரங்களில், கனிமொழி பெயர் இருந்தது. ஆனால், அவருடைய படம் இடம் பெறவில்லை. மாநாட்டின் விளம்பர பேனர்களிலும், கனிமொழி படம் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில், அமைச்சர் சாமிநாதன் கொடுத்த விளம்பரத்தில், கனிமொழி பெயர், படம் எதுவும் இடம் பெறவில்லை. மேலும், கட்சியின் சில நிர்வாகிகள் கொடுத்த விளம்பரத்திலும், கனிமொழி பெயர், படம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் கயல்விழி கொடுத்த விளம்பரத்தில் மட்டுமே கனிமொழி பெயர், படம் இடம் பெற்றிருந்தது. இது குறித்து, கனிமொழி ஆதரவாளர்கள் கூறியதாவது: 'தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவராகவும், கட்சி துணைப் பொதுச்செயலராகவும் கனிமொழி உள்ளார். மகளிர் மாநாடு, அவர் தலைமையிலேயே நடத்தப்பட்டது. கருணாநிதியின் மகள், முதல்வர் ஸ்டாலினின் தங்கையான அவரது பெயர், படம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதாக இல்லை. அமைச்சரோட விளம்பரத்தில் உதயநிதியை விளம்பரப்படுத்திய அளவுக்கு, கனிமொழியை இடம்பெற செய்யவில்லை. மரபுப்படி மாநாட்டிற்கு தலைமை வகிப்பவர்களின் படம், பெயர் தான் விளம்பரம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் முதன்மையாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கனிமொழியின் பெயர், படம் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டதால், கனிமொழியின் வளர்ச்சியையும், அவரது செல்வாக்கையும் திட்டமிட்டு தடுக்க முயற்சித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி