| ADDED : ஆக 20, 2024 05:18 AM
புதுச்சேரி: அறைக்குள் புகுந்து வாலிபரை கத்தியால் குத்திவிட்டு, மொபைல்போன் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.அரியலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 31; புதுச்சேரியில் ஜூஸ் கடையில் வேலை செய்கிறார். அவர் தன்னுடன் வேலை செய்யும் 2 ஊழியர்களுடன் சேர்ந்து கேன்டீன் வீதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று காலை ராஜேஷ் தங்கியிருந்த அறைக்குள் குடிபோதையில் வாலிபர் ஒருவர் நுழைந்தார். அப்போது கண் விழித்த ராஜேஷ் மர்ம நபரை தடுத்து யார் என விசாரித்தார்.அந்த மர்ம நபர் அறையில் இருந்து ஒரு மொபைல்போனை எடுத்து கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். மர்ம நபரை ராஜேஷ் பிடிக்க முயன்றபோது, மறைத்து வைத்திருந்த கத்தியால், ராஜேஷ் கழுத்தில் குத்திவிட்டு தப்பிச் சென்றார். வலி தாங்க முடியாமல் ராஜேஷ் அலறினார். பக்கத்து அறைகளில் தங்கியிருந்த சக ஊழியர்கள் ராஜேைஷ மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.