புதுச்சேரி : புதுச்சேரி அமைச்சர்கள் வெளிநாடுகளில் பணத்தை பதுக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது:புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு, 'இண்டியா' கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவை கேட்டுள்ளார். இதில் இருந்து, மத்தியில் உள்ள பா.ஜ அரசு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க முடியாது என்று, தெளிவாக சொல்லி விட்டதாக தெரிகிறது. பட்ஜெட்டை பொருத்தவரை கடந்தாண்டை விட இந்தாண்டில், ரூ.300 கோடி குறைந்துள்ளது. முதல்வரின் பிறந்தநாளுக்காக கோர்ட் உத்தரவு மீறப்பட்டு, ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. முதல்வருக்கு ஆதரவாக, பேனர்கள் குறித்து புகார் அளிக்க கொடுக்கப்பட்டிருந்த வாட்ஸ் ஆப் எண், திடீரென விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கான விளைவுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சந்திக்க வேண்டிய சூழல் வரும்.ஒரு அமைச்சர் பினாமி பெயரில், கடந்த மூன்று ஆண்டுகளில், 5 வீடுகளை வாங்கியிருக்கிறார். இன்னொரு அமைச்சர் வெளிநாட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளார். மற்றொரு அமைச்சர், தன்னுடைய ஆட்களை அனுப்பி, சுவிஸ் வங்கியில், பணத்தை பதுக்குவதற்கான வேலைகளை பார்க்கிறார்' என்றார்.
ரங்கசாமி?
நிருபர்கள் முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடம், 'ரங்கசாமி இண்டியா கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா' என, கேட்டதற்கு அவர் 'காங்., கூட்டணிக்கு வரவேண்டும் எனில் கட்சித் தலைமையை அணுகவேண்டும். அதுகுறித்து புதுச்சேரி காங்., முடிவெடுக்கமுடியாது. தனிப்பட்ட முறையிலும் 'இண்டியா' கூட்டணிக்கு வருவது குறித்தும் கூறமுடியாது. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்' என்றார்.