| ADDED : ஆக 22, 2024 01:51 AM
பாகூர் : குருவிநத்தம் சித்தேரி வாய்க்கால் பாலத்தை சீரமைக்கும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பாகூர் தொகுதி, குருவிநத்தம் கிராமத்தில் சித்தேரி வாய்க்கால் - குருவிநத்தம் சந்திப்பில் உள்ள பழைய பாலத்தை புனரமைத்து, பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், பாலத்தை புனரமைத்து தெற்கு கரை பகுதியில் 50 மீட்டர் நீளத்திற்கு பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்க 23.94 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நீர்பாசன பாகூர் கோட்ட இளநிலை பொறியாளர் ஜெயராமன் மற்றும் குருவிநத்தம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ., கோபம்
நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் செல்வராஜ், பங்கேற்காதது குறித்து செந்தில்குமார் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பினர். பாகூர் நீர்பாசன கோட்டம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இங்குள்ள விவசாயிகளின் பிரச்னை என்னவென்று அவருக்கு எப்படி தெரியும். அவர் வந்த பின், மற்றொரு நாள் பூமி பூஜை நடத்திடலாம் என, கூறி விட்டு கோபமாக புறப்பட முயன்றார். அதிகாரிகள் அவரை சமாதானம் செய்ததை தொடர்ந்து, பூமி பூஜையில் பங்கேற்றார்.