| ADDED : ஜூலை 04, 2024 03:39 AM
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகளை தடுக்க தவறிய மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கும் ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் மாசுக்கப்பட்டு துறையின் உதவி பேராசிரியர் பணிக்கு கடந்த 2010ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தஸ்னீமா அப்பாசி என்பவரது நியமனத்தை எதிர்த்து சத்திய நாராயணன் மற்றும் பலர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு கடந்த 26 ம்தேதி நீதிபதி பட்டு தேவானந்த் கோரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பாலன் ஹரிதாஸ், புதுச்சேரி மாசுக்கட்டுபாட்டு உதவி பேராசிரியர் பணிக்கு சுற்றுச்சூழல் இன்ஜினியரிங், பொது சுகாதார பொறியியல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட தகுதி, சுற்றுச்சூழல் துறையின் முன்னாள் தலைவரின் மகளுக்கு சாதகமாக 2010ம் ஆண்டு அறிவிப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அப்பதவிக்கு துறை தலைவரின் மகள் தஸ்னீமா அப்பாசி சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளார் என வாதிட்டார்.இருதரப்பு வாதங்களை கேட்ட பின் நீதிபதி, கடந்த 2020 ஏப்ரல் 1ம்தேதி வெளியிடப்பட்ட மாசுக்கட்டுபாட்டு உதவி பேராசிரியர் பணி நியமனத்தை நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டார். அத்துடன் ஓ.பி.சி., உள்ளிட்ட அனைத்து உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை புதிதாக வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.இந்த நியமனம் சட்ட விரோதமானது; தன்னிச்சையானது; தீங்கிழைக்கும் செயல் என, சென்னை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. மேலும் புதுச்சேரி பல்கலைக்கழக மாசுக்கட்டுபாடு, எரிசக்தி தொழில்நுட்ப மையத்தின் உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகளை தடுக்க தவறிய மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கும் கண்டனம் தெரிவித்தது.தீர்ப்பின்போது, புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தில் எல்லாம் சரியில்லை என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றம் வர தயங்கவில்லை என்று நீதிபதி பட்டு தேவானந்த் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த முழு தீர்ப்பு ஐகோர்ட் இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.