| ADDED : ஜூன் 07, 2024 06:49 AM
திருக்கனுார் : திருக்கனுாரில் மாட்டுப்பண்ணையில் வேலை செய்த வெளி மாநில நபரை கத்தியால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர். ஒரிசா மாநிலம் நுணஹரி பகுதியைச் சேர்ந்தவர் நிமைன் மண்டல், 23; இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தபன், 19; என்பவரும் திருக்கனுார் கட்டுக்கரை சாலையில் உள்ள மாட்டுப் பண்ணையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் தபன் கடந்த இரு நாட்களுக்கு முன் மாட்டுப் பண்ணையில் இருந்த கோழியை திருடி சமைத்து சாப்பிட்டதாக தெரிகிறது. இதனை அங்கு உடன் வேலை செய்யும் நிமைன் மண்டல் கண்டித்துள்ளார்.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று காலை 3:00 மணி அளவில் நிமைன் மண்டல் தங்கி இருந்த அறைக்கு சென்ற தபன், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், நிமைன் மண்டலின் கை மற்றும் தோள்பட்டையில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.நிமைன் மண்டலின் அலறல் சத்தத்தை கேட்டு உடன் இருந்தவர்கள் அவரை மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். நிமைன் மண்டல் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய தபனை தேடி வருகின்றனர்.