| ADDED : மார் 14, 2024 04:13 AM
புதுச்சேரி : சி.என்.என்., - நியூஸ் 18 செய்தி சேனல் சார்பில், பிரிட்ஜெஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியின் தாளாளர் புவனா வாசுதேவனுக்கு விருது வழங்கப்பட்டது.இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளவர்களை கண்டறிந்து, ஆண்டுதோறும் அவர்களுக்கு விருது வழங்கி சி.என்.என்., - நியூஸ் 18 செய்தி சேனல் கவுரவித்து வருகிறது. இந்தாண்டிற்கான, விருது வழங்கும் விழா அண்மையில் மும்பையில் நடந்தது.இதில், புதுச்சேரி பிரிட்ஜெஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியின் தாளாளரும், சிறப்பு பயிற்சியாளருமான புவனா வாசுதேவனுக்கு, கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக 'சேன்ஜ் மேக்கர்' விருதை, மகாராஷ்ட்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நடிகர் சுனில் ெஷட்டி, நடிகை குல் பனாக், டாடா டிரஸ்ட் முதன்மை செயல் அதிகாரி சித்தார்த் சர்மா ஆகியோர் வழங்கினர்.புவனா வாசுதேவன் கூறும்போது, 'இன்றைய பெற்றோர், குழந்தைகள் உறவில் அதீத பிரச்னைகள் உள்ளன.மாணவர்களின் படிப்பில், விருப்பமின்மை, மெதுவாக எழுதுவது, எழுத்துக்கூட்டி படிப்பது, எழுத்து பிழை போன்றவற்றை பெற்றோர் கண்டறிந்து தீர்வு காண வேண்டும்.ஒவ்வொரு மாணவரின் நுண்ணறிவு திறனின் அளவு மாறுப்படும். தங்கள் பிள்ளைகளுக்கு எந்த துறையில் நாட்டம் அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து, அதை எதிர்கொள்ள பெற்றோர் தன்னம்பிக்கை தர வேண்டும்' என்றார்.