உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு பேனர் வைத்தது எதிர்கட்சி தலைவருக்கு தெரியுமா?: சப்-கலெக்டர் புகாரை மதிக்காத அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி

தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு பேனர் வைத்தது எதிர்கட்சி தலைவருக்கு தெரியுமா?: சப்-கலெக்டர் புகாரை மதிக்காத அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி

முதலியார்பேட்டை நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன்கோவில் செடல் திருவிழாவிற்கு வருபவர்களை வரவேற்பதற்காக கூறிக்கொண்டு கடலுார் சாலை முழுவதும் அரசியல் கட்சியினர் பிரமாண்ட பேனர்களை வைத்து அலப்பறை செய்துள்ளனர்.குறிப்பாக தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,வான சம்பத்தை வரவேற்று அதிக பேனர்கள் வைத்துள்ளனர். எதிர்கட்சி தலைவர் சிவாவும் தனக்கு பிறந்த நாள் பேனர் வைக்க வேண்டாம் என்று அடிக்கடி கட்சி தொண்டர்களிடம் சொல்லி வருகின்றார்.கடலுார் சாலையில் தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத்தை வரவேற்று தான் அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. எதிர்கட்சி தலைவர் சிவா, கடலுார் சாலை வழியாக தான் தினமும் தனது பண்ணைக்கு சென்று வருகிறார்.பொது மக்களுக்கு இடையூறாக சட்ட விரோதமாக பேனர்களை வைத்துள்ளது எதிர்க்கட்சி தலைவர் சிவா கண்ணுக்கு தெரியவில்லையா.ஏன் தன் கட்சியின் எம்.எல்.ஏ., வையும், தொண்டர்களை அழைத்து அகற்ற சொல்லவில்லை. ஊருக்கு தான் உபதேசமா என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.இது ஒருபுறம் இருக்க, கடலுார் சாலையில் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதை கண்டு கடும் அதிருப்தியடைந்த வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் கடந்த 11ம் தேதி முதலியார்பேட்டை போலீசில், போட்டோ ஆதாரத்துடன் புகார் கொடுத்தார்.இருந்தும் போலீசார், புதுச்சேரி நகராட்சி, பொதுப்பணித்துறை, சாலை பாதுகாப்பு குழுவுடன் இணைந்து சட்ட விரோத பேனர்களை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இத்தனைக்கும் வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் தான் வடக்கு பகுதியின் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட். அவருடைய அதிகாரத்தின் கீழ் தான் முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வருகிறது. ஆனால், அவர் புகார் கொடுத்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அப்புறம் யார் புகார் கொடுத்தால் தான் அரசு துறைகள் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க போகின்றனர் என்ற கேள்வியே எழுந்துள்ளது.கடலுார் சாலையில் உள்ள சட்ட விரோத பேனர்கள் குறித்து முதலியார்பேட்டை போலீசில் புதுச்சேரி திறந்தவெளி சீர்குலை சட்டம் பிரிவு-6ன் கீழ் பெயர் தெரியாதவர்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த எப்.ஐ.ஆர்., நகல் மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.அப்படி இருந்தும் கூட அரசு துறை அதிகாரிகள் பேனர்களை அகற்றாமல் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், இது போன்ற சட்ட விரோத பேனர்கள் விஷயத்தில் வழக்கம்போல் ஆட்சியாளர்கள் மவுனமாக உள்ளனர். நிதிமன்றம் நேரடியாக தலையிட்டு குட்டு வைத்தபோதும் புதுச்சேரியில் காட்சிகள் இன்னும் மாறவில்லை.

இது தான் மரியாதை

வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் புகார் கொடுத்த பிறகு தான் கடலுார் சாலையில் அதிக பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சப் கலெக்டர் புகார் கொடுப்பதற்கு முன் 15 பேனர்கள் தான் இருந்தது. தற்போது 25 பேனர்களாக அதிகரித்துவிட்டது. இன்னும் சில நாட்களில் 100 பேனர்களை தொட்டுவிடும். இவ்வளவு தான் சப் கலெக்டருக்கு புகாருக்கு முதலியார்பேட்டை போலீசார் கொடுத்துள்ள மரியாதை.

எப்.ஐ.ஆர்.,வுடன் கடமை முடிந்தது

வடக்கு சப்-கலெக்டர் முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள, புகாரில்,எனது எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11ம் தேதி ரோந்து சென்றபோது நயினார்மண்டபத்தில் சாலை நடைபாதையில், அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வாகனம், பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளது. அவர்கள் மீது புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்குலைவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.ஆனால், பேனர் வைத்துள்ளவர் தங்களுடைய பெயரையும் கட்சியின் பெயரையும் கொட்டையாக போட்டு வைத்துள்ளனர். முதலியார்பேட்டை போலீசார், ஒப்புக்கு எப்.ஐ.ஆர்., போட்டுவிட்டு கடமையைமுடித்துவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை