புதுச்சேரி: முதலியார்பேட்டையை சேர்ந்தவர் வைரமணி, 57. இவர், 45 அடி சாலையில் உடற்பயிற்சி நிலையம் மற்றும் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் புதுச்சேரியை சேர்ந்த முருகன் மாதச் சீட்டு கட்டினார். சீட்டு முடிந்ததால், அதற்கான ரூ. 25 லட்சம் தருவதற்கு பதில் ரூ.5 லட்சம் மட்டும் வைரமணி கொடுத்தார். மீதி தொகையை பிறகு தருவதாக கூறினார். தொடர்ந்து முருகன், மீண்டும் புதிய சீட்டில் சேர்ந்து கடந்த 5 மாதமாக ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்து 850 கட்டியிருந்தார். இதற்கிடையே, வைரமணி கொடுக்க வேண்டிய பழைய சீட்டு பணம் ரூ.20 லட்சத்தை கேட்டு, முருகன் அவரை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை.இதுகுறித்து முருகன், சி.பி.சி.ஐ.டி., போலீசில் அளித்த புகாரின் பேரில், வைரமணி, அவரது மகன் தேவா, 28; மகள் தவமணி, 24; நிறுவன ஊழியர்கள் லாஸ்பேட்டை சாந்தி நகர் புஷ்பா,45; வம்பாகீரப்பாளையம் மணிமேகலை, 35; பாகூர் பாலா,46; ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். வைரமணி மொபைல் டவரை போலீசார் ஆய்வு செய்தபோது, குஜராத் பகுதியை காட்டியது. தனிப்படை போலீசார் குஜராத் விரைந்தபோது, வைரமணி போலீசாரை திசை திரும்பும் நோக்கில் தனது மொபைல் போனை குஜராத்தில் உள்ள தனது நண்பருக்கு கூரியர் மூலம் அனுப்பி வைத்தது தெரியவந்தது.இதற்கிடையே, வைரமணி தனது நண்பர் ஒருவரிடம் பணம் வாங்குவதற்காக புதுச்சேரி, கோரிமேடு பகுதிக்கு வந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று, அங்கிருந்த வைரமணியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.