| ADDED : ஜூலை 01, 2026 06:12 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில திறன் மேம்பாட்டு இயக்ககம் சார்பில் தொழில் துறையினருக்கான,பிரதான் மந்திரி சேது திட்டம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது. புதுச்சேரி ராஜிவ் சதுக்கம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்வில், தொழிலாளர் துறை செயலரும், பயிற்சி இயக்குநருமான ஸ்மிதா சிறப்புரை ஆற்றினார். இப்பயிலரங்கில், தொழிலாளர்துறை சார்பு செயலர் சந்திரகுமரன், மத்திய பயிற்சி இயக்குநரகத்தைச் சேர்ந்த ஷஷாங்க் பரிமி மற்றும் சேது ஹப் உறுப்பினர் செயலர் அழகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிலரங்கில், பிரதான் மந்திரி சேது திட்டத்தின் நோக்கங்கள், தொழில்துறைக்கு கிடைக்கும் பயன்கள் மற்றும் திறன் மேம்பாட்டின் அவசியம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் மற்றும் கேள்வி, பதில் நிகழ்வில் தொழில் துறையினர் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். புதுச்சேரி மாநில திறன் மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநர் சரவணன் நன்றி கூறினார்.