| ADDED : ஜூன் 17, 2024 11:41 PM
புதுடில்லி: ''பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே ஒற்றுமையில்லை. இப்படி ஒரு நிலையை வேறு எந்த ஒரு அணியிலும் பார்த்தில்லை,'' என, பயிற்சியாளர் கிறிஸ்டன் தெரிவித்தார்.அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. பாகிஸ்தான் அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்திருந்தது. முதலிரண்டு போட்டியில் அமெரிக்கா, இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், அடுத்த இரண்டு போட்டியில் கனடா, அயர்லாந்தை வீழ்த்தியது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்து லீக் சுற்றோடு திரும்பியது. இதற்கு, பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் தென் ஆப்ரிக்காவின் கேரி கிறிஸ்டன் கூறுகையில், ''பாகிஸ்தான் அணியை, ஒரு அணி என்றே கூற முடியாது. ஏனெனில் வீரர்களிடம் ஒற்றுமை இல்லை. ஒருவருக்கொருவர் ஆதரவாக இல்லாமல் விலகுகிறார்கள். ஒவ்வொரு வீரரும் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். நான் நிறைய அணிகளில் பணியாற்றி உள்ளேன். இதுபோன்ற மோசமான சூழ்நிலையை எந்த ஒரு அணியிலும் கண்டதில்லை. இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்தது ஏமாற்றம். போட்டியின் போது முடிவு எடுப்பதில் ஏற்பட்ட சொதப்பல் லீக் சுற்றோடு வெளியேற காரணமாக அமைந்தது,'' என்றார்.