| ADDED : மே 30, 2024 10:49 PM
ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் (10 சுற்று) நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன், உலகின் 'நம்பர்-1' வீரர் கார்ல்சன் (நார்வே), நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த மூன்றாவது சுற்றில் 'கிளாசிக்கல்' முறையில் மோதினர். இது மெதுவாக நகர்த்தும் ஆட்டம். வீரர்கள் போதிய நேரம் எடுத்துக் கொண்டு விளையாடலாம். இருவருக்கும் தலா 2 மணி நேரம் தரப்பட்டது. இதற்கு முன் மோதிய 'கிளாசிக்கல்' போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வென்றது (3 'டிரா') இல்லை. இம்முறை வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 37 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 'கிளாசிக்கல்' பிரிவில் கார்ல்சனுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தார். மூன்று சுற்று முடிவில் 5.5 புள்ளியுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் காருணா (5.0), நகமுரா (4.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். பிரான்சின் அலிரேசா (3.5), கார்ல்சன் (3.0), டிங் லிரென் (2.5) 4, 5, 6வது இடத்தில் உள்ளனர்.வைஷாலி அபாரம்பெண்களுக்கான தொடரின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, உக்ரைனின் அனா முஜிசக்கிற்கு எதிராக 'டிரா' செய்தார். மூன்று சுற்று முடிவில் வைஷாலி (5.5 புள்ளி), சீனாவின் ஜு வென்ஜுன் (4.5) முதல் இரு இடத்தில் உள்ளனர். இந்தியாவின் ஹம்பி (3.0) நான்காவதாக உள்ளார்.