அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசின்மய விநாயகா, ஸ்ரீபாலமுருகன் கோவிலில், 64-வது ஆண்டு சித்திரை கிருத்திகை பால் காவடி பெருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.பால் காவடி பெருவிழாவையொட்டி, கோவில் வளாகம் மற்றும் முக்கிய வீதிகளில், மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் பரணி விழா நடைபெற்றது. பின், நேற்று அதிகாலை மங்கல இசையுடன் பால் காவடி பெருவிழா துவங்கியது.காலை 7:00 மணிக்கு சேவல் கொடியேற்றுதலுடன் துவங்கி, மூலவர் சன்னியில் உள்ள சின்மய விநாயகர், பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.பின் சின்மய விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.எலப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த காப்பு அணிந்த பக்தர்கள், பால் காவடி, வேல் காவடி, பறவை காவடி, பால்குடம் எடுத்தல் என, மேளதாளம் முழங்க, முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சின்மய விநாயகர் மற்றும் பாலமுருகன் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.வீடுகள்தோறும் பக்தர்கள், கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர். இரவு, இன்னிசைக் கச்சேரிகள், நாடகம் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கிருத்திகை விழா
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று, சித்திரை கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் சுவாமிக்கு செய்யப்பட்டன.விழாவில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், காவடி எடுத்தும், அலகு குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தசுவாமி பெருமானின் திருவீதியுலா, மாட வீதிகளில் வந்தது. முன்னதாக, பரணி உற்சவத்தில் கந்தசுவாமி பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.