அச்சிறுபாக்கம் : செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், 59 ஊராட்சிகள் உள்ளன. இதில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.மக்கள் தொகையின் அடிப்படையில், அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் எல்.எண்டத்துார், ஒரத்தி மற்றும் ராமாபுரம் ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஐந்து பொது மருத்துவர்கள் உள்ளனர். இவர்களுக்கு உதவியாக ஆறு செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். பிரசவ வார்டு பகுதியில் 30 படுக்கை வசதிகள் உள்ளன.மாதந்தோறும் ஐந்து முதல் பத்து பிரசவங்கள் நடைபெறுகின்றன. தினமும் 350க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.கிராம பகுதிகளில் இருந்து அச்சிறுபாக்கத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் வருவதை தவிர்க்கும் வகையில், 2 - 3 ஊராட்சிகளுக்கு, ஒரு துணை சுகாதார நிலையம் என்ற வீதத்தில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 59 ஊராட்சிகளில், 27 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.இதில், 27 துணை சுகாதார நிலையங்களுக்கும், 27 கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளனர். வெங்கடேசபுரம், வேடந்தாங்கல், பாப்பநல்லுார், தீட்டாளம், பெரும்பாக்கம் ஊராட்சிகளில் மட்டும் துணை சுகாதார நிலையங்கள், சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன.மற்ற 22 துணை சுகாதார நிலையங்களும், ஊராட்சிகளில் உள்ள இ -- சேவை மையம், ஊராட்சி அலுவலகம், நுாலக கட்டடம், மகளிர் குழு கட்டடம் மற்றும் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன.கிராம பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், கர்ப்பிணி பெண்களை கண்டறிதல், கர்ப்பிணி முழு பரிசோதனை, பால்வினை நோய் கண்டறிதல், தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து முகாம் செயல்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.இந்த கட்டடங்களில் போதிய இடம், கழிப்பறை மற்றும் காற்றோட்டம் இன்றி உள்ளது.எனவே, துணை சுகாதார நிலையங்களுக்கு, சொந்த கட்டடம் கட்டித் தர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கூறியதாவது:அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் ஐந்து துணை சுகாதார நிலையங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகின்றன. சிறுபேர்பாண்டி, மொறப்பாக்கத்தில் புதிதாக இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கரிக்கிலி ஊராட்சியில், புதிதாக கட்டடம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்ற ஊராட்சிகளிலும், துணை சுகாதார நிலையங்களுக்கு புதிதாக கட்டடம் அமைக்க, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதார நிலையம் இடித்து அகற்றம்
ஆணைக்குன்னம் ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு முன், அரசு தொடக்கப் பள்ளி அருகே துணை சுகாதார நிலையக் கட்டடம் கட்டப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. தற்போது, கட்டடம் பழமையானதால், அவை இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, அதே பகுதியில் புதிதாக கட்டடம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.