| ADDED : ஜூலை 30, 2024 11:10 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, கிழக்கு பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் என்பவரின் 10 வயது மகன், நேற்று காலை காத்தவராயன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, அந்த பகுதியில் சுற்றிச் திரிந்த தெரு நாய்கள், சிறுவனை கால் உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறின. அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர்.தொடர்ந்து, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து, மறைமலை நகர் பகுதிவாசிகள் கூறியதாவது:மறைமலை நகர் நகராட்சியின் 21 வார்டுகளிலும், நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருக்கள், பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு, நாய் தொல்லை காரணமாக, குழந்தைகளை விட அச்சமாக உள்ளது.இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இரவு பணி முடித்து, இருசக்கர வாகனங்களில் வரும் போது நாய்கள் துரத்துகின்றன. எனவே, இந்த பகுதியில் நாய்களை பிடிக்க, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து நகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது, ”மறைமலை நகர் நகராட்சி அடிகளார் சாலையில், விரைவில் நாய்கள் கருத்தடை மையம் அமைய உள்ளது. விலங்குகள் நல வாரிய அலுவலர்களுடன் இணைந்து, தெரு நாய்கள் பிடிக்கப்பட உள்ளன,” என்றார்.