| ADDED : ஆக 21, 2024 11:37 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டில், வஜ்ஜிராபுரம் கிராமம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதிவாசிகள், இறந்தவர்களின் உடல்களை ஏரிக்கரை பகுதி வழியாக கொண்டு சென்று, ஏரிக்கரை ஓரம் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்து வருகின்றனர்.இடுகாட்டிற்கு செல்லும் பாதை, ஏரிக்கரை பகுதி வழியாக செல்வதால் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில், இறந்தவர்களின் உடல்களைக் கொண்டு செல்ல, மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.இதுகுறித்து, கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, பேரூராட்சி சார்பாகவும், கிராம மக்களும், பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இப்பகுதியை ஆய்வு செய்து, இடுகாட்டிற்கு பாதை வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.