உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

சென்னை : கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவதோடு, அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு சிற்றுந்துகளை இயக்க வேண்டுமென, போக்குவரத்து துறை வல்லுனர்கள் தெரிவித்துஉள்ளனர்.சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் கிளாம்பாக்கத்தில் புது பேருந்து நிலையம், 88 ஏக்கர் பரப்பளவில், 393.71 கோடி ரூபாயில் கட்டி திறக்கப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் 215 பேருந்துகளை இயக்க முடியும். முதல்கட்டமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு, சொகுசு பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை மையம்

வாகன நிறுத்தம் வசதி, மின்துாக்கி, எஸ்கலேட்டர், கண்காணிப்பு கேமராக்கள், தாய்மார்கள் பாலுாட்டும் அறை, அவசர சிகிச்சை மையம், மருந்தகம் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன.ஆனாலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு போதிய இணைப்பு பேருந்துகள், வாகன வசதிகள் இல்லை என, பயணியர் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:சென்னையில் நெரிசலை குறைக்க, கிளாம்பாக்கத்தில் புது பேருந்து நிலையம் திறக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இருப்பினும், சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தடையின்றி இணைப்பு பேருந்துகளை இயக்கினால் மட்டுமே, இந்த புதிய நிலையம் திறந்ததற்கான உரிய பலன்களை பெற முடியும்.அருகில் அமைய உள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதுபோல், மீனம்பாக்கம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். அருகில் உள்ள வண்டலுார், ஊரப்பாக்கம், பெருங்களத்துார் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு சிற்றுந்துகளை இயக்க வேண்டும். அதுபோல் வாடகை சைக்கிள், 'பேட்டரி' இருசக்கர வாகன திட்டங்களை செயல்படுத்தலாம். மேலும், நடைபாதைகளை ஆக்கிரமிப்புகளின்றி பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, அண்ணா பல்கலை ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் கூறியதாவது:கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை பிரமாண்டமாக கட்டி திறந்துள்ளனர். இந்த பேருந்து நிலையத்திற்கு, இணைப்பு பேருந்துகளை தடையின்றி இயக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

'ஸ்வாக்' பாலம்

பேருந்துகளின் இயக்க மாற்றத்தை, பயணியருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். கடைசி நேரத்தில் அறிவித்து செயல்படுத்தி, பயணியரிடம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. வெளியூர் செல்வோர், மாநகர பேருந்துகளில், 'லக்கேஜ்' கொண்டு செல்ல இடவசதி ஏற்படுத்த வேண்டும்.ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வகையில் 'ஸ்வாக்' பாலம் அமைக்க வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க, மாநகரின் மற்ற வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது. புதிய பேருந்துகளின் இயக்கத்தை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இடம் ஒதுக்க கடிதம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட துவங்கியுள்ள நிலையில், போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு உணவகம், அலுவலக இடம் ஒதுக்க வேண்டும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் சி.எம்.டி.ஏ.,வுக்கு கடிதம் எழுதி உள்ளது.கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், விரைவு போக்குவரத்து கழகத்திற்கான வசதிகள் கூட முழுமையாக செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக சி.எம்.டி.ஏ.,வுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் எழுதியுள்ள கடிதம்:அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்காக பணிமனை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து, 300 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணியாளர்களுக்கு உணவகம், உணவு தயாரிக்கும் இடம், கழிப்பறை, கிளை மேலாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு தனி இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே, பணி மனை வளாகத்தில் இதற்கான அறைகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கிளாம்பாக்கத்தில் இருந்து பிற போக்குவரத்து கழகங்கள், ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் போது, மேலும் பிரச்னைகள் தெரியவரும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


 பட்டம்

13 hour(s) ago  




அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை