| ADDED : நவ 24, 2025 03:00 AM
மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த கூடலுார் காடு, ஏரிக்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் நகராட்சி கூடலுார் பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள கூடலுார் - கோவிந்தாபுரம் செல்லும் ஏரிக்கரை சாலையை கோவிந்தாபுரம், கருநிலம், மருதேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கூடலுார் ஏரிக்கரை சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சமீப காலமாக, அதிக அளவில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கூடலுார் ஏரிக்கரை மற்றும் சுற்றுப் பகுதியில் இறைச்சிக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், குப்பை உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொண்டு வந்து கொட்டி விட்டுச் செல்கின்றனர். அருகில் உள்ள வனப்பகுதியிலும் குப்பை கொட்டப்படுகிறது. எனவே, இந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.