| ADDED : நவ 21, 2025 03:07 AM
மதுராந்தகம்:எல்.எண்டத்துாரில், உடைந்துள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அச்சிறுபாக்கம் ஒன்றியம், எல்.எண்டத்துார் ஊராட்சியில், உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ - -- மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் நுழைவாயில் அருகில், சுற்றுச்சுவர் சேதமடைந்திருந்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன், பள்ளி நுழைவாயில் பகுதியில், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மழைநீர் செல்ல சிறுபாலம் அமைக்கப்பட்டது. அப்போது, பள்ளிக்குள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்ல மாற்று வழியாக, சிறிய அளவில் சேதமடைந்திருந்த சுற்றுச்சுவர் மேலும் இடித்து பெரிதாக்கப்பட்டது. தற்போது, சிறுபாலம் கட்டும் பணி முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், சுற்றுச்சுவர் சீரமைக்கப்படவில்லை. அதனால், இரவு நேரம் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில், மர்ம நபர்கள் பள்ளிக்குள் புகுந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதேபோல், இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் 'குடி'மகன்கள் புகுந்து மது அருந்தி விட்டு, காலி மது பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டுச் செல்வதால், மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே, சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.